காடுவெட்டி குரு மீது உரிமை மீறல் பிரச்சனை: கிருஷ்ணசாமி கோரிக்கை
தர்மபுரி: ஒரு எம்எல்ஏவாக இருந்து கொண்டு சாதி வெறியைத் தூண்டும் வகையில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு பேசியது தவறு. இதன்மூலம் அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவி ஏற்கும் போது மேற்கொள்ளும் பிரமாணத்தையே மீறியிருக்கிறார். இதனால் அவர் மீது நான் தந்த உரிமை மீறல் பிரச்சனை தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தர்மபுரி அருகே காதல், கலப்புத் திருமணம் காரணமாக வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளான தலித் மக்களை இன்று கிருஷ்ணசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
பாமகவைச் சேர்ந்த வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு போன்றோர் தான் இது போன்ற சம்பவங்களுக்குக் காரணம்.
மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டுக் கூட்டத்தில் பேசிய காடுவெட்டி குரு, வன்னியர் இனப் பெண்களை வேறு சாதியினர் திருமணம் செய்து கொண்டால் அவர்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
ஒரு எம்எல்ஏவாக இருந்து கொண்டு இவ்வாறு பேசுவது சரியல்ல. அவர் எல்லோருக்கும் பொதுவாக சட்டமன்ற உறுப்பினர் ஆனவர். ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவி ஏற்கும் போது மேற்கொள்ளும் பிரமாணத்தையே அவர் மீறியிருக்கிறார்.
இதனால் தான் அவர் மீது சட்டமன்றத் தலைவரிடம் உரிமை மீறல் மனு கொடுத்தேன். ஆனால், சட்டமன்றக் கூட்டம் விரைந்து முடிந்துவிட்டதால், அப்போது விவாதிக்க முடியாமல் போய்விட்டது.
அடுத்து வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்த உரிமை மீறல் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.