ஜாதி மாறி வரன் தேடுவோருக்காக சென்னையில் நடக்கும் 'இணை தேடல் பெருவிழா'!
இதில் ஜாதி மறுப்பு காதலர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலப்புத் திருமணங்களை செய்து வைக்கவுள்ளார்.
பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. எண்ணற்ற சுயமரியாதை திருமணங்களையும், கலப்பு திருமணங்களையும் நடத்தி உள்ளது. மேலும் விவாகரத்து ஆனவர்கள், துணையை இழந்தவர்களுக்கும் மீண்டும் திருமணம் செய்ய உதவி வருகிறது.
இந் நிலையில் முற்போக்கு சிந்தனையுள்ள குடும்பத்தினர் வரன் தேடுவதற்கு வசதியாக ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழாவை ‘மன்றல் 2012' என்ற பெயரில் நடத்தவும் பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் திட்டமிட்டுள்ளது.
வரும் 25ம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஜாதி மறுப்பு வரன்கள் தேடுதல் தவிர, காதலர்களுக்கு ஜாதி மறுப்பு கலப்பு திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத் திறனாளிகள், விவாகரத்து பெற்றவர்கள், துணையை இழந்தவர்களுக்காக தனியாக வரன் தேடல் நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது.
இதில் பங்கேற்று வரன் தேட ஏராளமானோர் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி 25ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
மேலும் ஒருவருக்கொருவர் விரும்பி ஜாதி, மதம் பாராமல் காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்புவோர் சட்டப் பாதுகாப்போடு இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஏராளமான சட்ட நிபுணர்களும் வழக்கறிஞர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
இந்த கலப்புப் திருமணத்துக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண்- பெண் இருவரும் 21 வயது நிரம்பியவர்களாகவும், தனித்து வாழ்க்கை நடத்துவதற்கான பொருளாதார வாய்ப்பு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் உரிய அடிப்படை மருத்துவ, மனவள சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். திருமணம் செய்து கொள்ள விரும்புவோர் வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்று கலப்பு திருமணங்களை நடத்தி வைக்கிறார்.
மேலும் விவரங்கள் அறிய 9176757084 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.