வங்க தேசத்தில் ஆடை தொழிற்சாலையில் பயங்கர தீ: 112 பேர் பலி
வங்க தேச தலைநகர் டாக்காவில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது சவார். அங்கு 7 மாடிக் கட்டிடத்தில் தாஸ் ரீன் பேஷன்ஸ் என்னும் ஆடைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வந்தது. தரை தளத்தில் உள்ள அந்த தொழிற்சாலையின் குடோனில் நேற்று இரவு திடீர் என்று தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பிற தளங்களுக்கும் பரவியது. இதில் தொழிற்சாலையில் பணியாற்றிய பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர். பலர் உயிர் தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இன்று காலை வரை 100 பேரின் கருகிய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிர் பிழைக்க மாடியில் இருந்து குதித்தவர்களி்ல் 12 பேர் இறந்தனர். ஆக மொத்த இந்த விபத்தில் இதுவரை 112 பேர் பலியாகியுள்ளனர். கட்டிடத்திற்குள் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த தகவல் அறிந்த ஊழியர்களின் உறவினர்கள் சம்பவ இடத்தில் கூடிவிட்டனர். அவர்களை கட்டுப்படுத்த எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் ராணுவத்தினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
வங்க தேசத்தில் முறையான பாதுகாப்பு வசதிகள் இன்றி சுமார் 4,000 ஆடை உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன எனபது குறிப்பிடத்தக்கது.