நாகை கடற்கரைக்கு மர்மமாக வந்து மறைந்த 50 பேர் யார்...?
நாகப்பட்டனம்: நாகப்பட்டனம் கடற்கரைக்கு ஒரு மர்மமான விசைப்படகு கரை தட்டி நின்றுள்ளது. அதில் 50க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் மாயமாகி விட்டனர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை. அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கீச்சாங்குப்பம் பகுதியில் கடற்கரையில் ஒரு இயந்திரப் படகு கரை தட்டி நின்றது. என்ஜின் பழுதானதால் அந்தப் படகு கரை தட்டி நின்றது. அந்தப் படகில் 50க்கும் மேற்பட்டோர் இருந்ததாக தெரிகிறது. அவர்கள் படகிலிருந்து இறங்கி மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.
கடற்கரையில் படகு கரை ஒதுங்கியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து சென்ற படகை மீ்ட்டனர். அந்தப் படகை சோதனை போட்டபோது, படகின் பதிவு எண் அழிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் கடற்கரையில் ஏராளமான பைகள் கிடந்தன. அதில் பிஸ்கட் பாக்கெட்கள், குழந்தைகளுக்கான பவுடர், மருந்து பாட்டில்கள், துணிகள் இருந்தன.
படகில் வந்தவர்கள் இலங்கைத் தமிழ் அகதிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இலங்கையிலிருந்து தப்பி வெளிநாடு செல்லும் வழியில் இங்கு அவர்கள் படகு கரை தட்டியதால் இறங்கிப் போயிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட படகு காரைக்காலைச் சேர்ந்த ஒருவருடையது என்று தெரிய வந்துள்ளது. அவர் மூலம் இந்த தமிழர்கள் அழைத்து வரப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகப்படுகிறார்கள் போலீஸார்.
தற்போது படகில் வந்து மாயமானவர்களைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த மர்மப் படகால் கீச்சாங்குப்பம் பகுதியில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications