2012ல் சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி விபத்தில் சிக்கி 547 பேர் பலி
சென்னை: கடந்த அக்டோபர் மாதம் வரை சென்னையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியவர்கள் 547 பேர் விபத்தில் .சிக்கி உயிர் இழந்துள்ளனர் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து போலீசார் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னையில் 40 லட்சம் வாகனங்கள் ரோட்டில் ஓடுகின்றன. இவற்றில் 78 சதவீதம் அதாவது 29 லட்சத்து, 44 ஆயிரத்து 750 வாகனங்கள் இரண்டு சக்கர வாகனங்கள் ஆகும். கடந்த 2011ம் ஆண்டு இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்கள் 683 பேர் விபத்தில் இறந்தனர். இவர்களில் ஹெல்மட் அணியாததால் 667 பேர் மாண்டுள்ளனர்.
இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதம் வரை இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்கள் 654 பேர் விபத்தில் பலியாகி இருக்கிறார்கள். இவர்களில் ஹெல்மட் இல்லாமல் வாகனம் ஓட்டி 547 பேர் இறந்திருக்கிறார்கள். இதுபோன்ற உயிர் இழப்புகளை தடுக்க, ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்க வாகன ஓட்டுனர்களிடம் தற்போது விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது.
ஹெல்மட் கட்டாயம் அணிய வேண்டும். 2 சக்கர வாகனத்தில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். குடித்துவிட்டு, அதிவேகமாக வாகனம் ஓட்டக்கூடாது என்பன போன்ற விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இனி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் போக்குவரத்து பிரச்சனைகளை தீர்க்க பொதுமக்களின் பல்வேறு அங்கத்தினர், ஆட்டோ டிரைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாகராட்சி, தொலைபேசி, மின்வாரியம் மற்றும் பேருந்து போக்குவரத்துக் கழக நிர்வாகத்தினர் ஆகியோருடன் போக்குவரத்து போலீசார் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலோசனை கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications