சட்டசபை வைர விழா: எக்கச்சக்க கெடுபிடி- 30 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி சீட்டு
சென்னை: சட்டசபை வைர விழாவுக்கு தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 30 பேருக்கு மட்டுமே அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் வைர விழா வரும் 30ம் தேதி பேரவை மண்டபத்தில் ஆளுநர் ரோசைய்யா தலைமையில் நடக்கிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட பலருக்கும் விழா அழைப்பிதழ் மற்றும் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றது. பேரவை மண்டபத்தில் குறிப்பிட்ட அளவு மட்டுமே நபர்கள் அமர முடியும் என்பதால் அனுமதிச் சீட்டு வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தலைமைச் செயலக அதிகாரிகள் கூறுகையில்,
வைர விழாவுக்கு தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் 30 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மட்டும் தான் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டங்களையொட்டி தலைமைச் செயலக ஊழியர்களுக்கு வரும் 29ம் தேதி பிற்பகல் முதல் 30ம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது.
பத்து மாடிகள் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடியில் முதல்வர் தேநீர் விருந்து அளிக்கிறார். விழாவுக்கு வருவோர் வரும் 30ம் தேதி மாலை 4 மணிக்குள் பேரவை மண்டபத்திற்கு வந்து இருக்கைகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கேமரா மற்றும் ஒலிப்பதிவுக் கருவிகள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டாது. இது தவிர பேரவை மண்டபம் மற்றும் அதையொட்டி இருக்கும் தாழ்வாரங்களில் செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications