எல்.கே.ஜி சீட்டுக்கு 17 லட்சம் டொனேசன்: எங்கே போகிறது கல்வி?
சென்னை: குழந்தையின் கல்விக்காக நூறு ரூபாய் செலவு செய்ய தடுமாறும் பெற்றோர்கள் உள்ள தமிழகத்தில்தான் தன் குழந்தையின் எல்.கே.ஜி சீட்டிற்காக 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கூடைப்பந்து மைதானத்தை கட்டிக்கொடுத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த ஒருவர். அடுத்த கல்வியாண்டிற்கான அட்மிசன் ஜனவரி மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்த கூத்து அரங்கேறி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வியாபாரம் ஆகும் கல்வி
சென்னை கீழ்ப்பாகத்தில் உள்ள மிகப்பிரபலமான பள்ளியில் தனது குழந்தைக்கு எல்.கே.ஜி., சீட் கேட்டுச் சென்றுள்ளார் ஒரு தந்தை. அவருக்கு சீட் கொடுத்த பள்ளி நிர்வாகம் டொனேசனாக 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான கம்ப்யூட்டர் லேப்பினை பெற்றுக்கொண்டது. இதே போல், சென்னை மயிலாப்பூரில் உள்ள பள்ளி ஒன்றிற்கு தனது குழந்தையின் அட்மிஷனுக்காக சென்ற தந்தை அப்பள்ளிக்கு ரூ. 17 லட்சம் மதிப்பிலான கூடைப்பந்தாட்ட மைதானத்தை கட்டிக்கொடுத்துள்ளார்.
சென்னையில் ரூ 4 லட்சம்
சென்னையில் உள்ள சிறந்த பள்ளிகளில் எல்.கே.ஜி.,யில் குழந்தைகளை சேர்ப்பதற்கு ரூ. 4 லட்சம் வரை டொனேஷன் கேட்கப்படுகிறது. சில இடங்களில் பெற்றோர்களிடம் ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லா கடனாக பெற்று, அக்குழந்தை பள்ளியை விட்டுச் செல்லும் போது மீண்டும் வழங்கும் நடைமுறையும் உள்ளதாக கூறுகின்றனர்.
திருப்பூரில் ரூ. 75 ஆயிரம்
இதே இரண்டாம் நிலை நகரங்களான மதுரை, திருப்பூர் போன்ற ஊர்களில் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 75 ஆயிரம் வரை கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. முன்பெல்லாம் கல்வி கட்டணம் என்ற பெயரில் கூடுதலாக பல ஆயிரங்கள் கேட்பார்கள். ஆனால் இப்போது பள்ளியை சீரமைக்க வேண்டும். புதிய கட்டிடங்கள் தேவைப்படுகிறது. அதை கட்டி கொடுத்தால் உங்கள் குழந்தைகளுக்கு அட்மிஷன் தருகிறோம் என்ற புதிய முறைகளை பின்பற்றுகிறார்கள்.
பெற்றோர்களும் பங்குதாரர்கள்
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் விதமாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில், பணப்பரிமாற்றத்திற்காக பள்ளிகளுடன் சேர்ந்து புதுப்புது வழிகளை கண்டறிய பெற்றோர்கள் தற்போது முயன்று கொண்டிருக்கிறார்கள். சில பள்ளிகளில் பெற்றோர்களை பள்ளிகளின் பங்குதாரர்களாகவே பாவிக்கும் நிலையும் உள்ளது.
கவலைப்படாத பெற்றோர்
எனது இரு குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக இருவருக்கும் தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 2 லட்சம் செலவு செய்தேன். அவர்களுக்காக சேமித்தேன். அவர்களுக்காக செலவு செய்தேன். இதனால் நான் ஒன்றும் இழக்கவில்லை என்கின்றார் ஒரு பெற்றோர்.
பெற்றோர்களா? பள்ளி நிர்வாகமா?
பெற்றோர்களின் இந்த செயல், எந்த வழியிலாவது பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்த்து விட வேண்டும் என்ற பெற்றோரின் எண்ணத்தை காட்டுகிறதா அல்லது தங்களது பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்காக என்ன வேண்டுமானாலும் கேட்டுப்பெறலாம் என்ற பள்ளிகளின் மனோபாவத்தை காட்டுகிறா என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.
தொடர்பு நீடிக்கவேண்டும்
தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக மட்டுமல்லாது, குழந்தைகள் தங்களது கல்வியை முடிக்கும் வரையில் அவர்களுக்கும் பள்ளிக்கும் இடையேயான தொடர்பு நல்லபடியாக நீடிக்க வேண்டும் என்பதற்காக, பெற்றோர் அளிக்கும் பரிசே இது என்கிறார் கல்வியாளர் மாலதி.
கால் கடுக்க காத்திருந்து அட்மிசன்
ஒருபுறம் குறிப்பிட்ட பள்ளியில் சேர்க்க வேண்டுமே என்பதற்காக கால்கடுக்க காத்திருந்து அப்ளிகேசன்களை வாங்கும் பெற்றோர்கள் மறுபுறம் லட்சக்கணக்கில் டொனேசன் கொடுத்து பள்ளியில் சேர்க்க முயலும் பெற்றோர்கள் என தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் இது நடந்துகொண்டுதான் இருக்கிறது.
அரசு பள்ளிகளின் நிலை என்ன?
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்தான் இன்றைக்கு உயர்பதவிகளில் இருக்கின்றனர். கல்வி என்றைக்கு தனியார்மயமாக்கப்பட்டதோ அன்றிலிருந்தே தமிழ்நாட்டில் கல்வி என்பது வியாபாரப் பொருளாகிவிட்டது. கட்டடங்களை பார்த்து கல்வியின் தரத்தை நிர்ணயிக்கின்றனர் இன்றைய பெற்றோர்கள். அதனால்தான் வசதியான பள்ளிகளில் சேர்க்க லட்சங்களை கொட்டிக் கொடுக்கவும் தயாராக உள்ளனர்.
குறைந்து வரும் கல்வித்தரம்
டொனேசன் பெற்றுக்கொண்டு சீட் கொடுக்கும் பள்ளியில் எப்படி தரமான கல்வியை எதிர்பார்க்க முடியும்? இதனால்தான் நாட்டில் கல்வியின் தரம் குறைந்து விட்டதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆதங்கப்பட்டுள்ளார். ஆனால் லட்சக்கணக்கில் டொனேசன் கொடுத்தாவது தனது குழந்தைகளை குறிப்பிட்ட பள்ளியில்தான் படிக்கவைப்பேன் என்று சில பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டில் கல்வி எங்கே செல்கிறது என்ற கேள்வி மனதில் எழாமல் இல்லை.