நாகர்கோவில் தேவசகாயம் பிள்ளைக்கு இன்று "முக்திப் பேறு" பட்டம்
நாகர்கோவில்: நாகர்கோவிலைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு அருளாளர் பட்டம் எனப்படுகிற ‘முக்திபேறு பட்டம்‘ அளிக்கும் விழா இன்று நடைபெறுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இத்தகைய பட்டம் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பதால் நாகர்கோவில் விழாக் கோலம் பூண்டிருக்கிறது.
"தேவசகாயம் பிள்ளை மறைசாட்சி‘ முக்திபேறு பெற்றவர் என போப் 16ம் பெனடிக்ட் அறிவித்துள்ளார். இந்தநிலைக்கு உயர்த்தப்படும் தமிழகத்தை சேர்ந்த முதல் நபர் இவர் தான்.

நாகர்கோவில் கார்மல் மேல்நிலை பள்ளிவளாகத்தில் நடைபெறும் விழாவில் ரோம் புனிதர் பட்ட திருப்பேராய தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமர்த் தோ தலைமை வகிக்கிறார். இந்தியாவின் வத்திக்கான் தூதர் சல்வதோரே பென்னாக்கியோ, கர்தினால் ஆஸ்வால்ட் கிராசியஸ் உட்பட இந்தியா முழுவதும் இருந்து பேராயர்கள், 45 ஆயர்கள், 500 குருக்கள், பல நூறு துறவியர்கள், கன்னியர்கள், இறை மக்கள் கலந்து கொள்கின்றனர்.
தேவசகாயம் பிள்ளை
கன்னியாகுமரி மாவட்டத்தின் நட்டாலம் என்ற கிராமத்தில் 1712ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி பிறந்தவர் நீலகண்டபிள்ளை என்ற தேவசகாயம். சிறுவயதிலேயே பல துறைகளிலும் திறமை பெற்றவராக இருந்தார் அவர். 1741-ம் ஆண்டு குளச்சல் துறைமுகத்தை டச்சு படைகள் கைப்பற்றுகின்றன. நீலகண்ட பிள்ளை உள்ளிட்ட மார்த்தாண்ட வர்மாவின் படையினரை டச்சு தளபதி டிலனாய் சிறைபிடிக்கிறார். பின்னர் டிலனாயும் நீலகண்டபிள்ளையும் நண்பர்களாகின்றனர். பின்னர் கத்தோலிக்க மதத்துக்கு மாறி தேவசகாயம் ஆகிறார். பின்னர் கிறித்துவ மத பரப்புரைகளில் ஈடுபடுகிறார். ஆனால் மன்னர் மார்த்தாண்ட வர்மா இதை ஏற்க மறுக்கிறார். தேவசகாயம் கைது செய்யப்பட்டு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தப்பட்டு எருக்கம்பூ மாலை அணிவித்து அவரை எருமைமாட்டில் அமரவைத்து ஊர்வலமாக நடத்துகிறார். பின்னர் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. 1752-ம் ஆண்டு ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கிறித்துவமதத்துக்காக உயிரை நீத்த இவருக்கு அருளாளர் பட்டம் வழங்குவதற்கு கோட்டாறு மறைமாவட்டம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டது. இதன் விளைவாக கிறித்துவ மதத்தில் உயரிய பட்டமான 'அருளாளர்' அல்லது ' முக்தி பேறு' பட்டம் இன்று தேவசகாயம் பிள்ளைக்கு வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications