கிருஷ்ணகிரி பெண் கலெக்டர் பூஜா குல்கர்னி சாலை விபத்தில் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக இருந்து வருபவர் பூஜா குல்கர்னி. இவர் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக தனது நேர்முக எழுத்தர் ஜெயசங்கர், டபேதார் முனிராஜ் ஆகியோருடன் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள மோரூர் என்ற ஊருக்குக் காரில் போய்க் கொண்டிருந்தார். காரை சிவானந்தம் ஓட்டினார்.
இவர்கள் கிருஷ்ணகிகரி சேலம் நெடுஞ்சாலையில், நாமஸ் பாறை என்ற இடத்தில் சென்றபோது திடீரென கலெக்டரின் காரை இன்னொரு கார் பின்னாலிருந்து வேகமாக முந்த முயன்றது. அப்போது அந்தக் காரின் பேனட் பகுதியானது, கலெக்டரின் காரை சுமார் 10 அடிக்கு இழுத்துச் சென்று தள்ளி விட்டது. இதில் நிலை தடுமாறிய கலெக்டரின் கார், முன்னால் சாலையோரமாக நின்றிருந்த அரசுப் பேருந்தின் பின்னால் போய் பலமாக மோதி விட்டது.
இதில் காரில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்து மக்கள் ஓடி வந்தனர். விபத்துக்குள்ளானது கலெக்டரின் கார் என்று தெரிந்ததும் மக்கள் ஓடி வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். போலீஸாரும் விரைந்து வந்தனர்.
கலெக்டர் உள்ளிட்ட அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே டபேதார் முனிராஜ் உயிரிழந்தார். மற்றவர்களில் கலெக்டர் பூஜா குல்கர்னியும், ஜெயசங்கரும் முதலுதவிக்குப் பின்னர் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தனியார் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பூஜா குல்கர்னியின் கணவர் கிர்லோஸ் குமாரும் ஐஏஎஸ் அதிகாரிதான். தகவல் கிடைத்ததும் அவர் உடனடியாக முதலில் கிருஷ்ணகிரி விரைந்து வந்தார். பின்னர் அவர் மனைவியுடன் பெங்களூர் மருத்துவமனைக்குப் பயணப்பட்டார்.












Click it and Unblock the Notifications