காவிரி நீரை நிறுத்திய கர்நாடகா: நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடவும் முட்டுக்கட்டை

தமிழக டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டு உள்ள சம்பா பயிரை காப்பாற்ற டிசம்பர் 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை 5 நாட்களுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு முதலில் மறுத்த கர்நாடக அரசு பின்னர் டிசம்பர் 6ம்தேதி நள்ளிரவு முதல் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட்டது. இந்த தண்ணீர் ஞாயிறு காலை மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது.
திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீர் வரத்து 10 ஆயிரத்து 120 கன அடியாக இருந்தது. ஒரு நாள் தாமதமாக தண்ணீர் திறந்ததால், திங்கள் கிழமை மாலை வரை தண்ணீர் திறக்கப்படுமென்று உச்சநீதிமன்றத்தில் அம்மாநிலம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு நாள் முன்னதாகவே தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்திவிட்டதாக கர்நாடக முதல் மந்திரி ஜெகதிஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கர்நாடக சட்டசபையில் திங்கட்கிழமை பேசிய அவர்,காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யும் படி உச்சநீதிமன்றத்தில் அரசு சீராய்வுமனு தாக்கல் செய்து இருக்கிறது. தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக காவிரி கண்காணிப்பு குழுவின் உத்தரவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறோம்.
கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை ஞாயிறு மாலையே நிறுத்திவிட்டோம். எனவே எதிர்கட்சிகள் தர்ணா நடத்துவதை கைவிட்டு, காவிரிப் பிரச்சினையில் தீர்வுகாண முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு 12 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்ற காவிரி கண்காணிப்பு குழுவின் முடிவு கர்நாடக விவசாயிகளுக்கு எதிராக உள்ளது. இதற்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது குறித்து சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
அரசிதழில் வெளியிடக்கூடாது
மேலும் நதிநீர் பங்கீடு குறித்து 5.2.2007ல் காவிரி நீர் நடுவர் மன்றம் அளித்த இறுதி உத்தரவை இந்திய அரசிதழில் வெளியிடக்கூடாது என்றும் ஜெகதீஷ்ஷெட்டர் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது பாஜகவினரும் காவிரி நீர் விவகாரத்தில் ஜெகதீஷ் ஷெட்டரை விமர்சித்தனர். இதன் காரணமாகவே தண்ணீர் திறப்பை நிறுத்த உத்தரவிட்டுள்ள ஷெட்டர், பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
12 டி.எம்.சி தண்ணீர்
இதற்கிடையில் காவிரி நதிநீர் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீதான வழக்கை விசாரித்த நீதிபதிகள், டி.கே. ஜெயின், மதன் பி. லோகூர் அடங்கிய அமர்வு, டிசம்பர் மாதம், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 12 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க வேண்டும் என்று காவிரி நதிநீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துமாறு உத்தரவிட்டது.
காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை இரு மாநில அரசுகளும் பின்பற்றுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், இது குறித்து மேல் முறையீட்டுக்கு காவிரி நதிநீர் ஆணையத்தை நாடலாம் என்று கூறி, வழக்கு விசாரணையை ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே கர்நாடகா நிறுத்திவிட்டதால் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications