கேரளாவில் எலிக்காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலி: மக்கள் பீதி
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு, எலிக் காய்ச்சல் போன்ற நோய்கள் வேகமாக பரவின. இதனால் ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள சுகாதாரத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதன் காரணமாக டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பரவுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் திருவனந்தபுரம் சாமவிளையைச் சேர்ந்த சரோஜினி, கொல்லம் அஞ்சலுமூடு பகுதியைச் சேர்ந்த அனில்குமார் மனைவி ஜெயஸ்ரீ ஆகியோர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்கள் நிலைமை மோசமானதைத் தொடர்ந்து கடந்த வாரம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தனர். எலிக் காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியான சம்பவம் கேரளாவில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications