மே.வங்க சட்டசபையில் ரணகளம்-அடிதடியில் 3 எம்.எல்.ஏக்களுக்கு படுகாயம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபையில் வரலாறு காணாத வன்முறை இன்று ஏற்பட்டது. இந்த வன்முறையில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிபிஎம். எம்.எல்.ஏக்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க சட்டசபை இன்று காலை கூடிய போது மாநிலத்தில் பெருகிவரும் நிதிநிறுவனங்கள் தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கட்சி(சிபிஎம்) கொண்டுவர முயற்சித்தது. இந்தத் தீர்மானத்தை அனுமதிக்கக் கோரி சபாநாயகர் பிமன் பானர்ஜி இருக்கை முன்பாக திரண்ட சிபிஎம் எம்.எல்.ஏக்கள் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இதனால் மூத்த அமைச்சர்கள் பர்தா சட்டர்ஜி, சுப்ரதா முகர்ஜி மற்றும் பிர்காத் ஹக்கீம் ஆகியோர் சபாநாயகருக்கு அருகில் பாதுகாப்பாக நின்று கொண்டனர். அதே நேரத்தில் மேலும் சில திரிணாமுல் மற்றும் சிபிஎம் எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் திரள பதற்றமான சூழல் நிலவியது. இரண்டு கட்சி எம்.எல்.ஏக்களையும் தனித்தனியே பிரித்து நிற்க வைக்கும் முயற்சியில் பர்தா சட்டர்ஜியும் ஹக்கீமும் முயற்சித்தனர்.
அப்போது திடீரென சிபிஎம் எம்.எல்.ஏ நஜ்முல் ஹக், சபாநாயகரின் மைக்ரோபோனை பிடுங்கி வீசி எறிந்தார். இதனால் பெரும் அமளி ஏற்பட்டது. எம்.எல்.ஏக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். வன்முறைகளைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகளை பிற்பகல் 1.30 வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் அவை கூடியது. அப்போது மூத்த அமைச்சர் சட்டர்ஜி, சபாநாயகரை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட சிபிஎம். எம்.எல்.ஏக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரினார். இதனால் சிபிஎம்-ன் நஜ்முல் ஹக், சுஷந்தா பெஸ்ரா, அஜ்மல் ஹூசேன் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். பின்னர் சபாநாயகர் சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். ஆனால் சபையில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது. சிபிஎம் உட்பட இடதுசாரி எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
இந்த களேபரத்தில் டெப்லினா ஹெப்ரம் என்ற எம்.எல்.ஏ.வை சிபிஎம் எம்.எல்.ஏக்கள் தள்ளிவிட்டதாகவும் புகார் எழுந்தது. இன்றைய வன்முறையில் சிபிஎம் எம்.எல்.ஏ கெளரங்க சட்டர்ஜி, படுகாயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இரண்டு திரிணாமுல் எம்.எல்.ஏக்களும் படுகாயமடைந்திருக்கின்றனர்.
மேற்கு வங்க சட்டசபை வரலாற்றில் மிக மோசமான வன்முறை சம்பவமாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது.












Click it and Unblock the Notifications