சென்னையில் 4 மாணவர்கள் பலியான சம்பவம்- அரசிடம் அறிக்கை கோரும் ஹைகோர்ட்!
சென்னை: சென்னையையில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியான வழக்கில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விபத்து
சென்னை புறநகர் பகுதியான திருப்போரூரில் இருந்து தியாகராயர் நகருக்கு 519ம் எண் கொண்ட பேருந்து நேற்று காலை சென்று கொண்டிருந்தது. காலை 8 மணியளவில் சென்னை பெருங்குடி லைப் லைன் மருத்துவமனை அருகே பேருந்து சென்ற போது ஓட்டுநர் சட்டென பிரேக் போட்டார். அப்போது பேருந்தின் படியில் தொங்கிய மாணவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
4 பேர் பலி- ஓட்டுநர், நடத்துநர் கைது
கீழே விழுந்த மாணவர்கள் மீது பேருந்துக்கு பின்புறமாக வந்து கொண்டிருந்த லாரி ஏறியது. இதில் படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் 4 மாணவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் 4 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலியான 4 பேரும் மாணவர்கள். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநர் அசோக் குமாரை வலை வீசித் தேடி வருகின்றனர்.
உயர்நீதிமன்றம் விசாரணை
இந்த விபத்து சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே விசாரணைக்கு இன்று எடுத்துக் கொண்டது. விபத்து தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி வரும் 19-ந் தேதியன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications