திமுக போன்று அதிமுக அரசுக்கு பெருந்தன்மை இல்லை: கருணாநிதி தாக்கு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிடத்தை ஓரிரு வாரங்களில் முதல்வர் திறந்து வைப்பார் என கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 9) காலை நாளிதழ்களில் செய்திகள் வந்தன. ஆனால் திடீரென முன்அறிவிப்பின்றி அன்று மாலையே எம்.ஜி.ஆர். நினைவிடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்துள்ளார்.
ரூ. 1.20 கோடியில் அண்ணா நினைவிடமும், ரூ. 7.70 கோடியில் எம்.ஜி.ஆர். நினைவிடமும் புதுப்பிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அவசர அவசரமாக திறக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணா நினைவிடம் புதுப்பிக்கப்பட்டது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
சில நாள்களுக்கு முன்பு திமுக வழக்குரைஞர் அணிச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நிறுவுவதை தடுக்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு டிசம்பர் 11ம் தேதி விசாரணைக்கு வரலாம் என்ற நிலையில்தான் எம்.ஜி.ஆர். நினைவிடம் அழைப்பிதழ்கூட இல்லாமல் திறக்கப்பட்டுள்ளது.
1996-2001 திமுக ஆட்சியில் அண்ணா நினைவிடத்தில் அமைக்கப்பட்ட உதயக்கதிர் போன்ற அமைப்பினை 2001ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அகற்றிவிட்டார்கள். 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் உதயக் கதிர் சின்னத்தை அமைக்க வேண்டும் என என்னிடம் கேட்டபோது வேண்டாம் என மறுத்துவிட்டேன். அது நமது பண்பாடு.
ஆனால் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், பாவேந்தர் செம்மொழி ஆய்வு நூலகம் ஆகியவை எங்கே என்பதே தெரியவில்லை.
1992ல் எனது பிறந்த நாளுக்காக கலைவாணர் அரங்கத்தை கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டது. இவையெல்லாம்தான் அதிமுக ஆட்சியின் பெருந்தனமையான செயல்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications