சமூக விரோத கும்பலை கண்டுபிடிக்கச் சொன்னதற்காக அம்பேத்கர்வளவன் கொலை: திருமா
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அண்மையில் சேர்ந்த ஒருவரைத் தாக்கியவர்களை கண்டுபிடிக்குமாறு போலீசாரை வலியுறுத்தியதற்காக அம்பேத்கர் வளவன் கொல்லப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மாவட்டத் துணைச் செயலாளர் அம்பேத்கர் வளவனை சமூகவிரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது. அவர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகவோ அல்லது அத்தகைய செயல்களுக்குத் துணை நின்றதாகவோ இது வரையில் புகாரோ, வழக்கோ பதிவானதில்லை.
அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட ஒருவரை சிலர் கொடூரமாகத் தாக்கிவிட்டுத் தப்பினர். அவர்கள் யார் என்பதை அடையாளப்படுத்தி அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க காவல் துறையினரிடம் வற்புறுத்தினார்.
இதனால் அவர்கள் அம்பேத்கர் வளவனை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்திருக்கிறார்கள். அப்பாவி மக்களுக்கு எதிராக மனசாட்சியோ மனிதநேயமோ துளியுமின்றி வெளிப்படையாகத் திட்டமிட்ட வன்முறைகளைத் தூண்டிவிடும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இது கண்டிக்கதக்கது.
காஞ்சி மாவட்டத் துணைச் செயலாளர் அம்பேத்கர் வளவன் படுகொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவருடைய துணைவியாருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications