திருடியதாக கூறி சிறுமிகளை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த மக்கள்: மனித உரிமைகள் தினத்தில் பரபரப்பு
சேலம்: சேலத்தில் துணிகளை திருட வந்ததாக கூறி 3 சிறுமிகளை பொதுமக்களே கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ம் தேதி இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கல்லாங்குத்து பகுதியில் உள்ள ஒரு தையலகத்தில் துணிகள் திருடு போயின. இந்த நேரத்தில் பழைய துணிகளை வாங்க 4 சிறுமிகள் வந்ததாகவும், அவர்கள் திருட வந்திருப்பதாக கூறி பொதுமக்களே சேர்ந்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். ஆனால், தாங்கள் திருடவில்லை என கூறியும் பொதுமக்கள் அடித்ததாக சிறுமிகள் கதறினர். அவர்களில் ஒருவர் தப்பி ஓடி உள்ளார்.
தகவல் அறிந்து சேலம் நகர காவல்துறையினர், சிறுமிகளை மீட்டு விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். டிசம்பர் 10ம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், சேலத்தில் மனித உரிமைகளை மீறும் வகையில் இவ்வாறு சிறுமிகள் தாக்கப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது. இந்த சம்பவம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.குற்றம் நிரூபிக்கப்படாமலேயே அந்த சிறுமிகளை அடித்து உதைத்தது சட்டப்படி குற்றம் என்று கூறிய அவர்கள், இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா கவனித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாசில்தாரை விசாரணை நடத்துவதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசணம் உத்தரவிட்டார். இதனையடுத்து சிறுமிகள் தாக்கப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications