எந்த சவாலையும் சந்திக்க தயார்: ஜனாதிபதி பிரணாப் பேச்சு
கோவையை அடுத்த சூலூரில் செயல்படும் விமானப்படை தளத்தில் ஸ்குவாட்ரன்-33 படைப்பிரிவு, மற்றும் குஜராத் மாநிலம் வதோதராவை மையமாக கொண்டு செயல்படும் ஸ்குவாட்ரன்-25 படைப்பிரிவு ஆகியவற்றின் 50 ஆண்டுகால சேவையை கவுரவிக்கும் வகையில் ஜனாதிபதி தர அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா சூலூர் விமானப்படை தளத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
விழாவில் ஜனாதிபதி பிராணாப் முகர்ஜி கலந்து கொண்டு விமானப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து விருது பெற்ற படைப்பிரிவுகளை சிறப்பிக்கும் வகையில் தபால் உறையை வெளியிட்டு, அந்த உறைகளின் மேல் கையெழுத்திட்டார். இதனைத்தொடர்ந்து ஸ்குவாட்ரன்-33 படைப்பிரிவு, ஸ்குவாட்ரன்-25 படைப்பிரிவு ஆகியவற்றுக்கு விருதுகளை வழங்கி ஜனாதிபதி பேசியதாவது:
இந்திய விமானப்படையில் சிறப்பாக சேவையாற்றும் 25 மற்றும் 33-வது ஸ்குவார்டன் படையினர் தற்போது தேசத்திற்கு அளித்து வரும் பங்களிப்பு இன்றியமையாதது ஆகும். இவர்களின் தன்னலமற்ற உழைப்பு, தளராத ஈடுபாடு, எந்த சவாலையும் சந்திக்கும் திறன் ஆகியவற்றை தேசம் போற்றுகிறது.
80 ஆண்டுகள் பாரம்பரிய பின்னணி கொண்ட இந்திய விமானப்படை தற்போது உலக நாடுகளின் மத்தியில் மிகவும் பலம் வாய்ந்ததாக உயர்ந்துள்ளது. தேசத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் எந்த சவாலையும் சந்திக்கும் திறன் இந்திய விமானப்படைக்கு உண்டு. இந்தியாவில் உள்ள முப்படைகளில் இந்திய விமானப்படை தேசப்பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அமைதியை விரும்பும் நாடு இந்தியா. இந்திய வெளியுறவு கொள்கையும் இதை வெளிப்படுத்தும் விதத்தில் தான் அமைந்துள்ளது.இதை உள்நாடு மற்றும் வெளிநாட்டு பங்களிப்பில் நிரூபித்து வருகிறோம். இந்த வகையில் ஐக்கிய நாட்டு அமைதிகுழுவில் இந்திய விமானப்படை இடம் பெற்றுள்ளது. இது இந்திய விமானப்படையின் திறமை, மற்றும் ஒழுக்க செயல்பாட்டுக்கு கிடைத்த மரியாதையாகும்.
இமயமலை கழுகுகள் என்று கூறப்படும் இந்திய விமானப்படையின் 25-வது குவாட்ரன் படைப்பிரிவு, வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள குடிமக்களுக்கும், எல்லைப்பாதுகாப்பு படையினருக்கும், போர் காலங்களிலும் அமைதி நிலவும் காலங்களிலும் உறுதுணையாக இருந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையில் இந்த விமானப்படை முக்கிய பங்குவகிக்கிறது.கடந்த 1965-77-ம் ஆண்டு நடந்த இந்திய-பாக்கிஸ்தான் போர்களிலும், கார்க்கில் போரிலும், இந்த விமானப்படை மிகவும் சவாலான நிகழ்வுகளை எதிர்கொண்டது. 1965-71-ம் ஆண்டு நடந்த போரிலும், 1989-ம் ஆண்டு இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படையிலும் விமானப்படையின் ஸ்வாட்ரன்-33-வது படைப்பிரிவின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
பேரிடர் காலங்களில் உதவி
தேசப்பாதுகாப்பு பணியில் மட்டுமல்லது, பேரிடர் ஏற்படும் போதும், இயற்கை சீற்றங்களின் போதும் மக்களைப் பாதுகாக்கும் பணியையும் இந்திய விமானப்படை செய்து வருகிறது. இது போல் சுனாமி மீட்பு பணிகளிலும், குஜராத்தில் ஏற்பட்ட நிவாரண பணிகளிலும் இந்த படை முக்கிய பங்கு வகித்தது.
உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நமது விமானப்படை பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் 2005-ம் ஆண்டு ஏற்பட்ட புயலின்போதும், 2008-ல் சீனாவில் ஏற்பட்ட பூகம் பத்தின் போதும் இந்திய விமானப்படை தனது பங்களிப்பை செய்துள்ளது இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
இவ்விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா, விமானப்படை தளபதி என்.ஏ.கே. பிரவ்னே, தென்மேற்கு இந்திய விமானப்படை தலைமை கமாண்டர் ஏ.கே.கோகை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.