திமுகவினரை படுத்தும்பாட்டுக்கு பதில் சொல்லும் காலம் வந்தே தீரும்: ஸ்டாலின்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தலைவர் கலைஞரின் ஆணைக்கிணங்க நாடாளுமன்றத் தேர்தல் பணிக்கான வேலைகளை தற்போதே தொடங்கிட திருச்சி நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் 15ம் தேதி காலையில் திருச்சியிலும், மாலையில் கரூர் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் கரூரிலும், 16ம் தேதி பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் முசிறியிலும் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
இந்த மூன்று கூட்டங்களிலும் பெருந்திரளான தொண்டர்கள் அலை அலையாய் வந்து கலந்து கொண்டு, ஒன்றையொன்று மிஞ்சியது என்று எல்லோரும் பாராட்டும் வகையில் எழிலுறக் கூட்டம் நடைபெற்றது. 15ம் தேதி திருச்சி காஜா மலையில் நடைபெற்ற திருச்சி நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டமா? அல்லது மாநாடா? என்று கண்டோர் வியந்திடும் வண்ணம் நடந்து முடிந்து, கழகத் தோழர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பினார்கள்.
அமைதியாகவும், யாருக்கும் எந்தவித இடையூறும் இல்லாமலும் பலரது பாராட்டையும் பெறும் வகையில் கூட்டம் நடந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத அரசின் காவல்துறை, அன்று இரவே கழகத் தோழர்கள் மீது பொய் வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. 15ம் தேதி திருச்சியில் காஜாமலை என்ற இடத்தில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவதற்கு, திருச்சி மாநகராட்சி மற்றும் மாநகரக் காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் அதற்கான முன் அனுமதி கோரி மனு கொடுக்கப்பட்டு, அதற்கான அனுமதியும் பெறப்பட்டு, கட்டணத் தொகையும் முறையாகச் செலுத்தப்பட்டு, விளம்பரம் செய்வதற்கான அனுமதியும் பெறப்பட்டு, போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு விளம்பரப் பலகைகளை வழக்கம்போல நிறுவி இருந்தனர். ஆனால் கூட்டம் முடிந்த பின்னர் அன்று இரவே காவல் துறை அதிகாரிகள் மூலம், கே.கே.நகர் காவல் நிலையத்திலும் மற்றும் கண்டோன்மென்ட் காவல் நிலையத்திலும் முறையே 11 வழக்குகள் வீதம், மொத்தம் 22 வழக்குகள் ஜோடிக்கப்பட்டு, அதில் திருச்சி மாவட்டக் கழகச் செயலாளர் கே.என். நேரு மீது மட்டும் 4 வழக்குகள், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கழக வேட்பாளராகப் போட்டியிட்ட ஆனந்த் மீதும், மாநகரக் கழகச் செயலாளர் அன்பழகன் மீதும் மற்றும் மாநகர, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் எனக் கழக நிர்வாகிகள் மீது 22 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு திறந்தவெளி பொது இடங்களின் அழகு கெடுவதைத் தடுக்கும் சட்டம் பிரிவு 4ஏ-யின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திறந்தவெளி இடங்களில் சாலைகளின் ஓரங்களில், விளம்பரத் தட்டிகளை நிறுவிட மாநகராட்சியின் அனுமதி பெற்று, அதற்கான கட்டணத் தொகையும் செலுத்தி, முறைப்படி நிறுவியுள்ளதால் அந்த இடங்களில் அழகு கெடுக்கப்படுவதாக காவல்துறை கற்பனையாகக் கருதி யாரையோ திருப்திப்படுத்திட வழக்குப் போட்டால் வழக்குகளைச் சந்திக்க தி.மு.கழகம் தயார்! இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லும் காலம் வந்தே தீரும்.
காவல்துறைக்கு ஒரு கேள்வி! முதலமைச்சர் ஜெயலலிதா போயஸ் தோட்டத்திலிருந்து புறப்பட்டுச் செல்லுகின்ற இடங்கள் தோறும் கட்-அவுட்கள் விளம்பரப் பலகைகள், பதாகைகள் வைக்கப்படுகிறது. இவற்றிற்கு எல்லாம் விளம்பரத்திற்கான அனுமதி பெறப்பட்டதா? இதற்கு காவல் துறையினரே பதில் கூறட்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications