கடையநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு விரைவில் புதிய தாலுகா: நெல்லை கலெக்டர்
நெல்லை: கடையநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு விரைவில் புதிய தாலுகா அமைக்கப்படும் என்று நெல்லை கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நெல்லை மாவட்டத்தில் தென்காசி, சிவகிரி, கடையநல்லூர் பகுதிகளை மறுசீரமைப்பு செய்து ஒருங்கிணைந்து கடையநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாநிலத்தில் 60 தாலூகாக்களை பிரிப்பது தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பபட்டுள்ளது. இதில் முன்னுரிமை அடிப்படையில் தாலூகாக்களை பிரிக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் ஊரக வளர்ச்சித் துறை திட்டங்களை செயல்படுத்த கூடுதலாக ஒரு செயற்பொறியாளரை நியமிக்க அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பல்வேறு சுற்றுலாத் தலங்களை உள்ளடங்கி காணப்படுகிறது. இத்தலங்களை மேம்படுத்தினால் பக்கத்து மாவட்டங்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் கவர முடியும். எனவே, மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தியை துவக்குவது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து தேவைப்பட்டால் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆலோசனைகள் நடத்தப்படும். அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் அதிகாரிகளின் பரிந்துரையின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் பெரிய நகராட்சி கடையநல்லூர். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக இருக்கும் செந்தூர் பாண்டியன் தேர்தல் வாக்குறுதியாக அதிமுக ஆட்சி வந்தால் கடையநல்லூர் தாலுகாவாக மாற்றப்படும், அரசு கலை கல்லூரி அமைக்கபடும் என்றார் அதன்படி இரண்டுமே இத்தொகுதிக்கு கிடைத்துவிட்டது.