தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசின் நடவடிக்கை என்ன?
தமிழ்நாட்டில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி வருவதால் அதை காண சகிக்காத விவசாயிகள் தங்கள் விளைநிலங்களிலேயே தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த இரு மாதங்களில் மட்டும் கடன்வாங்கி பயிரிடப்பட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகியதால் காவிரி டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த 8 விவசாயிகளும், விருதுநகர் மாவட்டத்தில் விவசாயி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமல்லாது விவசாயிகள் தற்கொலை என்பது நாடுமுழுவதும் நடைபெறும் நிகழ்வாக உள்ளது. 12 மணிநேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளி விபரம்.
இந்தியாவில் கடந்த 16 ஆண்டுகளில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 17 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் பதிவாகியுள்ள விவசாய தற்கொலைகளில் பெரும்பாலானவை மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மற்றும் சட்டீஷ்கர் மாநிலங்களில் நடைபெற்றுள்ளது.
மகாராஷ்டிராவில் தற்கொலை அதிகம்
1995-ல் முதன் முதலாக தேசிய குற்றங்கள் பதிவு அமைப்பு என்பது விவசாய தற்கொலைகளை பட்டியலிட்டது. இந்த விபரங்களில் மேற்சொன்ன 5 பெரிய மாநிலங்கள் 56.04 சதவீதத்தை தன்னகத்தே கொண்டிருந்தது. 2010-ல் 66.49 சதவீதமாக உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 1995 முதல் 2002 வரையிலான காலத்தில் 20,066 விவசாயிகள் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அடுத்த 8 ஆண்டுகளில் இதே மாநிலத்தில் இந்த எண்ணிக்கை30,415 என உயர்ந்துள்ளது. பின்னால் உள்ள காலத்தை பார்க்கிற போது வருடத்திற்கு 1155 வீதம் இந்த மாநிலத்தில் மட்டும் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
தென்மாநிலங்களில் தற்கொலைகள்
மகாராஷ்டிராவைத் தவிர ஆந்திரமாநிலத்தில் விவசாயிகள் தற்கொலைகள் அதிகம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து கர்நாடகா, கேரளா, தமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று தேசிய குற்றப்பதிவு ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலை
2009ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 17 ஆயிரத்து 175 விவசாயிகள் தற்கொலை செய்தனர். தமிழகத்தில் அதே ஆண்டில், 1,060 விவசாயிகள் தற்கொலை செய்தனர். அதில், 856 பேர் ஆண்கள்; 204 பேர் பெண்கள். அகில இந்திய அளவில் இது 7.3 சதவீதம். மத்திய அரசின் தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள விவரக்குறிப்பேட்டின் மூலம், இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. இதற்கு முந்தைய ஆண்டான 2008ம் ஆண்டு தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 512 ஆக மட்டுமே இருந்தது.
இருமாதங்களில் 10 விவசாயிகள்
கடந்த நவம்பர் மாதம் நாகை மாவட்டம் மகிழி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற விவசாயி, நெற்பயிரை காக்க முடியாது என்று கருதி மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வங்கிக்கடனை கட்ட வழி தெரியாமலேயே அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
விருதுநகர் விவசாயி
இதே போன்று விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதை கண்டு வேதனை அடைந்த பாண்டியன் என்னும் விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
புதுக்கோட்டை, கரகத்தியைச் சேர்ந்த விவசாயி ரங்கசாமி என்பவர் பாசனத்திற்கு போதிய தண்ணீர், மின்சாரம் இல்லாததால், விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கும்பகோணம் விவசாயி
கும்பகோணம் அருகே, குடவாசல் தாலுகா, கடம்பக்குடியை சேர்ந்த சக்திவேல் என்ற விவசாயி சம்பா சாகுபடி கைவிட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் ஒரு பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. டெல்டா மாவட்டத்தில் மட்டும் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதை காண சகிக்காத 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அரசு என்ன செய்கிறது?
விவசாயிகளின் துயர் துடைக்க தமிழக அரசு எதுவும் செய்ததாக தெரியவில்லை. தமிழக எம்.பிக்களோ காவிரி தண்ணீருக்காக ஒற்றுமையுடன் போராடியதாக தெரியவில்லை. ஆனால் விவசாயிகளுக்கு இலவச அரிசியும், அவர்களுக்கு சலுகைகளும் வழங்கப்படுவதாக பாராளுமன்றத்தில் பதில் அளித்துள்ளார் தமிழகத்தை ஆளும் எம்.பி ஒருவர்.
விவசாயிகளின் துயர் துடைக்குமா?
பருவமழை பொய்த்துவிட்டது. காவிரி நீரை நம்பி கடன்வாங்கி பயிரிட்ட விவசாயிகள் கையை பிசைந்து கொண்டு நிற்கின்றனர். எங்கோ ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் மாறி விவசாயிகளின் தற்கொலை தினசரி செய்தியாகி வருகிறது. தற்கொலைகளை தடுக்க தங்களுக்கு உரிய நிவாரணத்தொகையை அரசு அறிவிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்