பெண் முதல்வர் ஆட்சி செய்யும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – கருணாநிதி குற்றச்சாட்டு
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கை:
தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறாரே?
டெல்லியில் பேருந்தில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திலேயே பிரச்னை எழுப்பப்பட்டு, குடியரசுத் தலைவர் மாளிகையை பெண்களே முற்றுகையிட முயற்சி செய்கின்ற அளவுக்கு நடைபெற்றுக் கொண்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் என்ன நிலை? 21-12-12 ஆங்கில நாளிதழில் தமிழகத்தில் கற்பழிப்பு குற்றங்களைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் கற்பழிப்புக் குற்றங்கள் 9 சதவீதம் அதிகம் என்று கூறியுள்ளது.
தமிழ்நாடு போலீஸ் பற்றிய வலைதளத்தில், 2011ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை தமிழகத்தில் 484 கற்பழிப்பு குற்றங்கள் என்பதற்கு மாறாக 2012ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 528 கற்பழிப்புக் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 528 குற்றங்களில், பெரும்பாலானவை அதாவது 75 கற்பழிப்புக் குற்றங்கள் சென்னை மாநகரில் மட்டும் பதிவாகியுள்ளன.
பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாகப் பணியாற்றும் பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் தரப்பட்டு, அந்தப் பெண் ஊழியர் விஷம் அருந்தியதாக செய்தி வந்துள்ளது.அதுமாத்திரமல்ல, ஸ்ரீவைகுண்டம் அருகில் பள்ளிக்குச் சென்ற 7ம் வகுப்பு மாணவி 12 வயதான புனிதா, மர்ம நபரால் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு, அனைத்து நாளேடுகளிலும் அது பற்றிப் பெரிதாகச் செய்தி வந்துள்ளது. ஒரு பெண் முதலமைச்சராக இருக்கும் போதே, தமிழகத்துப் பெண்களுக்கு நேர்ந்து வரும் கொடுமைகள் பெருமைப்படும்படியாகவா இருக்கின்றன?
மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடாமல் தடுக்கத்தான் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம் என்று நீங்கள் கூறியதற்கு, 1999 முதல் 2004 வரை பாஜகவின் மதவாதம் கருணாநிதி கண்ணுக்குத் தெரியவில்லையா என்று கேள்வி கேட்கிறார்களே?
பாஜகவுடன் திமுக தோழமை கொண்டு ஆட்சியில் பங்கேற்கும் முடிவை எடுப்பதற்கு முன்பாக, குறைந்த பட்ச செயல் திட்டம் வகுத்து, அதை அவர்கள் ஏற்றுக் கொண்டதற்குப் பிறகுதான் அந்தக் கூட்டணி அரசில் பங்கேற்றது. அசல் நிறத்தை வெளிக்காட்டிக் கொண்டதால் அதாவது பாதை மாறிச் சென்றதால்தான் 2004ல் அந்தக் கூட்டணியிலிருந்து திமுக விலகியது. அவர்களின் மதவாதம் தற்போது தெளிவாகத் தெரிந்த காரணத்தினால்தான் மீண்டும் அவர்கள் வந்து விடக் கூடாது என்பதில் திமுக உறுதியுடன் செயல்படுகிறது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை சிங்கள ராணுவம் கைது செய்து சிறை வைத்திருப்பது பற்றி திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லையே?
அந்தத் தமிழ் மாணவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் (ஆசியா) பிராட் ஆடம்ஸ், எவ்வித குற்றச் சாட்டும் இல்லாமல் தமிழ் மாணவர்களை இலங்கை அரசு கைது செய்து மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பியிருப்பது அபாயகரமானது; அவர்களை இலங் கை அரசு உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.வெலிகண்டாவில் உள்ள மறுவாழ்வு மையத் தில் இந்த மாணவர்கள் மட்டுமல்ல, அந்த இல்லத்தில் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் 600 தமிழர்களை அடைத்து வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தலித், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதி மதிப்பெண்களில் சலுகை வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதே?
ஆந்திர மாநிலத்தில் 10 சதவீதமும், ராஜஸ்தான் மாநிலத்தில் 5 சதவீதமும் தகுதி மதிப் பெண்களில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் வேறு சில மாநிலங்களிலும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் தகுதி மதிப்பெண்களில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் மா ற்றுத் திறனாளிகளுக்கு இந்தச் சலுகை அளிப்பது குறித்து தமிழக அரசு இதுவரை எந்தவிதமான அறிக்கையையும் வெளியிடவில்லை.இவ்வாறு சலுகை அளிக்கப்படாமலேயே 12&7&2012, 14&10&2012 தேதிகளில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. ஆதி திராவிடர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தமிழக அரசு இந்தச் சலுகையை அளித்திருந்தால், அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 22,000 ஆசிரியர்களில் இந்தப் பிரிவின் சார்பில் குறைந்தபட்சம் 7 ஆயிரம் ஆசிரியர்களாவது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் தமிழக அரசு இந்த சலுகையை ஏன் இன்னும் வழங்கவில்லை என்று தெரியவில்லை. இது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்போது மேற்கொள்ளப்படும் பணி நியமனம், இந்த வழக்கில் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் அறிவித்திருக்கிறார்கள். தமிழக அரசில் எப்
படிப்பட்ட குளறுபடிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்பதற்கு இதுவும் ஓர் சான்றாகும்.என்று தன் அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.