ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு… பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்
பூலோகவைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 13 ம் தேதி தொடங்கியது.
ஜனவரி 3ம் தேதி வரை பகல்பத்து, ராப்பத்து என 21 நாட்கள் விழா நடைபெற உள்ளது.பகல்பத்து கடந்த 14ம் தேதி துவங்கி இன்று வரை நடைபெறுகிறது. நாளைய தினம் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நாளை அதிகாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது.
இதனையொட்டி நாளை அதிகாலை 3.15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சிபாடல் பாடப்படும். தொடர்ந்து ரத்தின அங்கி, கிளிமாலை, பாண்டியன் கொண்டை அலங்காரத்துடன் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு விருச்சிக லக்னத்தில் சிம்மகதியில் பெருமாள் புறப்படுகிறார். அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். பக்தர்கள் வெள்ளத்தில் பெருமாள் பரமபத வாசலை கடந்து திருக்கொட்டகையில் பிரவேசிப்பார்.
சொக்கவாசல் திறப்பு நிகழ்ச்சியைக் காண இன்று முதலே ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 11 எஸ்பிக்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் போலீசார் ஸ்ரீரங்கம் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
திருமலையில் இன்று சொர்க்கவாசல்
இதனிடையே திருமலை ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.இந்த வழியாக இன்றும், நாளையும் 2 நாட்கள் மட்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
முதலில் அமைச்சர்கள், நீதிபதி, எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சிக்கள், அரசு அதிகாரிகள் என அவரவர்களின் முக்கியத்துவத்தின்படி தரிசனம் செய்ய தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது. இவர்கள் அனைவரும் லகு தரிசன வழியாக அதிகாலை 1.45 மணி முதல் தரிசனத்துக்கு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து காலை 5 மணி முதல் இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். திவ்ய தரிசன டிக்கெட் பெற்றவர்கள் நாராயணகிரி பூங்கா வழியாகவும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் செல்வதற்கு சிறப்பு வரிசையில் அனுமதிக்கப்பட்டனர்.