மாணவி மரணம்.. கற்பழிப்பு குற்றவாளிகள் மீது பாய்கிறது கொலை வழக்கு!
இவர்களில் பஸ் டிரைவர் ராம்சிங் முக்கிய குற்றவாளி ஆவான். அவனது சகோதரன் முகேஷ் மற்றும் அக்ஷய், பவன், வினய் ஆகியோர் மற்ற குற்றவாளிகளாவர். 6வது குற்றவாளி 15 வயது மைனர் என்பதால் அவன் பெயரை மட்டும் போலீசார் வெளியிடவில்லை.
குற்றாளிகள் 6 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி), 201 (தடயங்களை அழித்தல்), 365 (கடத்தல்), 376(2) (ஜி) (கும்பலாக கற்பழித்தல்), 377 (இயற்கைக்கு விரோதமான குற்றம் புரிதல்), 394 (தாக்கி காயப்படுத்தி வழிப்பறி செய்தல்) மற்றும் 34 (துன்புறுத்தல்) ஆகிய 7 பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் குற்றவாளிகளிடம் போலீசார் விசாரண நடத்தி வந்தனர்.
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை மற்ற கைதிகளுடன் வரிசையில் நிற்க வைத்து அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது. மாணவியின் நண்பர் அந்த அணி வகுப்பை பார்த்து கற்பழிப்பு குற்றவாளிகளை மிகச் சரியாக அடையாளம் காட்டிவிட்டார்.
இந் நிலையில் இன்று காலை சிங்கப்பூர் மருத்துவமனையில் அந்த மாணவி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து குற்றவாளிகள் 6 பேர் மீதும் கொலை குற்றம் பாய்ந்துள்ளது. அவர்கள் மீது டெல்லி போலீசார் இன்றே இந்திய தண்டனை சட்டம் 302 (கொலை) பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்துய உள்ளனர்.
மேலும்மாணவி கொடுத்த மரண வாக்குமூலம், அவர் நண்பர் கொடுத்த வாக்குமூலமும் சேர்க்கப்பட்டு இந்த வழக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. திங்கள்கிழமை தடயவியல் அறிக்கையும் தயாராகிவிடும்.
இவற்றை ஒருங்கிணைத்து வரும் ஜனவரி 2ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட மறுநாளே இந்த வழக்கு விசாரணை தொடங்கி விடும் என்று தெரிகிறது.
வழக்கு விசாரணை தினமும் நடத்தப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது. கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டோம் என்று வழக்கறிஞர்களும் அறிவித்துள்ளனர்.
வழக்கு விசாரணையை இதுவரை இல்லாத அளவுக்கு மிக விரைவாக நடத்தி முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனையை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று கொடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனவே குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.