இது என்ன சாலமன் பாப்பையா பட்டிமன்றமா?: மதுரை ஆதீனம் கேள்வி கேட்கிறார்!
இது குறித்து மதுரை ஆதீனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி குழு கூட்டம் என்பது ஒரு மாநில மக்களின் வாழ்வாதாரத்தை மேம்மடுத்துவதற்காக கூட்டுகின்ற கூட்டம். இக்கூட்டம் கூடிக் கலைகின்ற கூட்டம் அல்ல. தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கும் தலைமகளாகத் திகழ்பவர் முதல்வர் ஜெயலலிதா. அவர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு முன்பு வைப்பதற்காக அக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
அக்கூட்டத்தில் எல்லா முதல்வர்களுக்கும் பத்து நிமிடம்தான் பேச கால அவகாசம் ஒதுக்கப்பட்டது என்று கூறுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. இது என்ன சாலமன் பாப்பையா பட்டிமன்றமா?. பத்து நிமிடம் மட்டுமே என்று நிர்ணயம் செய்ததே முறையற்றது. அதைவிட முறைகேடான செயல் முதல்வர் ஒரு சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே மணியடித்து பேச்சை நிறுத்து என்று சொன்னது எவ்வளவு பெரிய அவமானம்? இந்த அவமானம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எற்பட்டது அல்ல. ஒட்டு மொத்தமாக தமிழகத்திற்கே அல்லவா?.
இதனை நாட்டில் உள்ள பொறுப்பு மிக்க தலைவர்கள் எவரும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். அதுமட்டுமல்ல முதல்வர் உரை நிகழ்த்திய சில ஆரம்ப வாக்கியங்களே உரை முழுவதும் சமர்ப்பித்ததாக பொருள் என்று கூறுவது பெரும் கிண்டல் அல்லவா?. அப்படியானால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் செல்ல வேண்டிய அவசியம் இல்லையே?. பேக்ஸ் மூலமே அவரது உரையை பெற்றிருக்கலாமே. அப்படியானால் டெல்லிக்கு வந்திருக்கவே வேண்டாமே?.
மத்திய அரசின் இந்தச் செயலை கண்டித்து முதல்வர் வெளிநடப்பு செய்தது கோபமோ ஆத்திரமோ அல்ல. மேலும் அரசியல் லாபத்திற்காகவும் அல்ல. இது தமிழர்களுக்கே உரிய தன்மான உணர்வு. இதை மத்திய அரசு உணர்ந்து செயல்பட்டால் சரி.
இவ்வாறு ஆதீனம் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இதையே ஒரு கடிதமாக பிரதமர் மன்மோகன் சிங்க்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அனுப்பி வைத்துள்ளாராம்.