டாஸ்மாக் கடையில் ரூ.3 லட்சம் மதுபானங்கள் மாயம்: விடிய விடிய தொடரும் விசாரணை
நெல்லை: ராதாபுரம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மாயமாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு குருசாமி என்பவர் சூபர்வைசராக உள்ளார். இந்த கடையில் தினமும் சுமார் ரூ.50,000 வரை மதுபானங்கள் விற்பனை ஆவது வழக்கம். இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் தொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இடிந்தகரை, கூத்தங்குழியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் சமூகரெங்கபுரம் டாஸ்மாக் கடையில் தினசரி விற்பனை இரண்டு மடங்காக உயர்ந்தது.
சிலர் இந்த கடையில் இருந்து மொத்தமாக மதுபானங்களை வாங்கிச் சென்று இடிந்தகரை, கூத்தக்குழியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர். இதனையடுத்து வள்ளியூர், ராதாபுரம் போலீசார் சோதனை நடத்தியபோது மதுபானம் கடத்திய சிலர் பிடிப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. சமூகரெங்கபுரம் கடையில் அதிக மது விற்பனையாவதால் மாவட்ட டாஸ்மாக் குடோனில் இருந்து அதிக சரக்கு கேட்டு ஊழியர்கள் டிமாண்ட் செய்தனர். இருப்பினும் விற்பனைக்குரிய பணத்தை சரிவர செலுத்தாமல் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த டாஸ்மாக் அதிகாரிகள் சமூகரெங்கபுரம் கடைக்கு சென்று சோதனை நடத்தினர்.
நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடந்த சோதனையில் ரூ.2 லட்சத்து 86 ஆயித்திற்கான மதுபானங்கள் இருப்பு குறைந்தது. மேலும் இதன் விற்பனை பணமும் இல்லை. இதையடுத்து கடை சூபர்வைசரிடம் அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் மொத்தமாக மதுபாட்டில்களை கொடுத்துவிட்டு அவர்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பிறகு அதிக பணம் வாங்கினாராஎன்பது போன்ற கோணங்களில் விசாரணை நடக்கிறது. இருப்பு குறைவான பணத்தை சூபர்வைசர் செலுத்தாத பட்சத்தில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications