சமையல் எரிவாயு: இனி விருப்பப்படி விநியோகதஸ்தரை மாற்றிக் கொள்ளலாம்!
டெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வைத்துள்ள நுகர்வோர் இனி தங்களது விநியோகஸ்தர்களை மாற்றிக் கொள்ளும் வசதியை (போர்ட்டபிலிடி) மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதனை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
எல்.பி.ஜி. எனப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வைத்துள்ள நுகர்வோர் இனி தங்களது விநியோகஸ்தர்களை மாற்றிக் கொள்ளும் வசதி சண்டீகரில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. 13.5 கோடி நுகர்வோருக்கு சிறந்த சேவைகளை அளிப்பதற்காகவும், சமையல் வாயு விநியோகஸ்தர்களின் ஏகபோக நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டவும் இந்த போர்ட்டபிலிடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்த நிதியாண்டில் இத்திட்டம் குறைந்தபட்சம் 25 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். நாடு முழுவதும் இத்திட்டம் படிப்படியாக விஸ்தரிக்கப்படும். மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள 2 முதல் 3 விநியோகஸ்தர்களில் ஒருவரை நுகர்வோர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இப்புதிய திட்டத்தின் கீழ் விநியோகஸ்தர்களை மட்டுமே மாற்ற முடியுமே தவிர, ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றோர் நிறுவனத்தின் சேவைக்கு மாற முடியாது. அதாவது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இண்டேன் சிலிண்டர் இணைப்பை வைத்துள்ள ஒரு வாடிக்கையாளர், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பாரத் கேஸ் இணைப்புக்கு மாற முடியாது. குறிப்பிட்ட வாடிக்கையாளர் தனது விநியோகஸ்தரை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும்.
விநியோகஸ்தர்களை மாற்றுவதற்கான கோரிக்கைகளை வாடிக்கையாளர்கள் இணையதளம் மூலம் முன்வைக்கலாம். இதேபோல், புதிய இணைப்புக்கான மனுக்களையும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என்று வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.
சிலிண்டர் விலை உயரும்
இதனிடையே டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு மிக விரைவில் முடிவெடுக்கும் என்று வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் இடையே ஆலோசனை நடந்து வருவதாக கூறினார். அதேநேரம், மானிய விலையில் அளிக்கப்படும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையை 6ல் இருந்து 9 ஆக அதிகரிப்பது பற்றியும் அரசு பரிசீலித்து வருவதாக கூறிய அவர், அதுபற்றிய அறிவிப்பும் விரைவில் வெளிவரும் என்றும் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications