பாம்பன் பாலத்தில் மீண்டும் ஓடும் ரயில்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேஸ்வரம் தீவையும் பாம்பன் பாலங்கள் தான் இணைக்கின்றன. ராமேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ரயில் பாலமும், சாலைப்பாலமும்தான் வழிகள். ரயில் பாலத்தை கப்பல்கள் கடப்பதற்கு வசதியாக இடையில் 'தூக்குப்பாலம்' அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாலத்தின் மீது கடந்த வாரம் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மோதியது.
இதனையடுத்து பாலத்தின் ஒரு தூண் சேதமடைந்தது. இதனால் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. சேதமடைந்த தூணின் இருபுறமும் இரும்பு ஆங்கிள்களால் முட்டுக்கொடுத்து விட்டு, சேதமுற்ற தூணின் மேல் பகுதியை மட்டும் வெடிவைத்து தகர்த்தனர். ரயில் பாரத்தை தாங்கும் அளவுக்கு பாலம் சீரமைப்பு பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பாம்பன் பாலத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதையடுத்து. மண்டபத்தில் இருந்து தூக்குப்பாலம் வரை 15 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் என்ஜின் இயக்கப்பட்டது. சேதமடைந்த இடத்தை கடக்கும்போது மட்டும் 5 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. பின்னர் என்ஜின் ராமேஸ்வரம் சென்றடைந்தது.
மாலை 6 மணியளவில் ராமேஸ்வரத்தில் இருந்து காலிப்பெட்டிகளுடன் புறப்பட்ட ரயில், பாம்பன் பாலத்தை மெதுவாக கடந்து, மண்டபம் ரயில் நிலையம் வந்தடைந்தது.
இந்த சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, ஞாயிறுக்கிழமை முதல் முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. காலை 10.05 மணிக்கு மதுரை -ராமேஸ்வரம் பயணிகள் ரயில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.
கடந்த ஒரு வாரமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பேருந்து போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்துதான் தங்களுக்கு செலவு குறைவானது எளிதானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது இரவு நேர ரயில் போக்குவரத்து மட்டும் 20,21 ஆகிய இரண்டு தினங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வேதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்காலிகமாக சரிசெய்யப்பட்டுள்ள பாலத்தை ஒரு மாதத்திற்குள் முறையாக சீரமைத்துவிடுவோம் என்று கூறிய அதிகாரிகள், அதன்பின் வழக்கமாக ரயில்கள் உரிய வேகத்தில் இயக்கப்படும் என்றார்.
பாம்பன் பாலம் அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ள இழுவைக் கப்பலை அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீண்டும் காற்று வேகமாக வீசும் பட்சத்தில் அந்தக் கப்பல் பாலத்தை நோக்கி வர வாய்ப்புள்ளது. மீண்டும் பாலம் சேதம் அடைந்தால் அதை சரிசெய்வது மிகவும் சிரமமாகிவிடும். எனவே அந்த கப்பலை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே ஊழியர்களுக்கு, அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications