26ல் கரூரில் தலித்துகள் செருப்பு அணிந்து செல்லும் போராட்டம்: சிபிஎம் அறிவிப்பு
கரூர்: குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி கரூர் அருகே உள்ள கொக்கம்பட்டியில் தலித்துகள் செருப்பு அணிந்து செல்லும் போராட்டம் நடைபெற உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே. கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம், அப்பிப்பாளையம் ஊராட்சியில் உள்ள கொக்கம்பட்டியில் கடந்த டிசம்பர் 25ம் தேதி செருப்பு அணிந்து சென்ற அருந்ததியர்கள் ஆதிக்க சக்தியினரால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நடத்தியவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி மனு அளித்துள்ளோம்.
மேலும் அந்தத் தாக்குதலை கண்டித்தும், அப்பகுதியில் நிலவும் தீண்டாமைக் கொடுமைக்கு முடிவு கட்ட வலியறுத்தியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதி தமிழர் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, ஜனவரி 26ம் தேதியான குடியரசு நாளில் கொக்கம்பட்டியில் அனைத்து வீதிகளிலும் தலித் மக்களை ஒருங்கிணைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. வரதராஜன் தலைமையில் செருப்பணிந்து செல்லும் போராட்டம் நடைபெறும்.
மேலும் கொக்கம்பட்டி பொது சீரணி அரங்கில் தலித்துகள் பங்கேற்கும் குடியரசு தினக் கலை நிகழ்ச்சியும் நடைபெறும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் இன்னும் கூட செருப்பு அணிந்து செல்லக் கூட ஒரு போராட்டம் நடத்த வேண்டிய இழிவான நிலை நிலவுவது மனதை கலங்க வைக்கிறது.












Click it and Unblock the Notifications