திமுக கூட்டணிக்கு தயாராகும் தேமுதிக! அதிமுகவுக்கு போக பண்ருட்டி ராமச்சந்திரன் திட்டம்!!

லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது என்ற மனநிலையில் கட்சித் தொண்டர்களுக்குக் கட்டளையிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
திமுகவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியுடன்தான் கூட்டணி என்பது உறுதியான ஒன்று. இந்தக் கூட்டணியில் தேமுதிகவை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் காங்கிரஸும் திமுகவும் முனைப்பு காட்டுகின்றன. காங்கிரஸின் 'புது' மாப்பிள்ளையான ராகுல்காந்தியும் இதற்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார்.
இந்த நிலையில் தேமுதிகவின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 25-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஹைலைட்டான டாபிக்கே 'கூட்டணி' யாருடன் என்பதுதானாம்! அதிமுகவை தோற்கடிக்க எந்தக் கூட்டணியோடும் சேரலாம் என்பதுதான் தேமுதிகவின் "தீர்மானிக்கும் சக்திகளான" பிரேமலதா மற்றும் சுதீஷின் கணக்கு. இதையேத்தான் அனைத்து மாவட்ட செயலாளர்களிடமும் சொல்லி இதே கருத்தை வலியுறுத்தி பொதுக்குழுவில் பேசுங்கள் என்று சொல்லி வருகின்றனர்.
ஆனால் இந்த உத்தரவுக்கு கட்டுப்படாத ஒருவரும் அக்கட்சியில் உண்டு! தேமுதிக அவைத்தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன்தான் அவர். திமுகவுடனான கூட்டணியையே விரும்பாத பண்ருட்டியார் தமது மகனுக்கு ஒரு எம்.பி.சீட் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தில் இருக்கிறாராம்..
பண்ருட்டியாரின் இந்த 'ஆவலை' மோப்பம் பிடித்து வைத்திருக்கிறது அதிமுக.. தேமுதிக, திமுக கூட்டணியில் ஐக்கியமாகும் நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் சொந்த பந்தம் என குடும்பத்தோடு அதிமுகவில் செட்டில் ஆகி மகனுக்கு ஒரு எம்.பி.சீட் வாங்கிவிடும் மனநிலையில் இருக்கிறாராம்!
ஆக களேபரம் காத்திருக்கு!












Click it and Unblock the Notifications