பாதி எரிந்த நிலையில் மாணவி சடலம்: சிவகிரியில் கடையடைப்பு… பேரணி
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரியில் பாதி எjfந்த நிலையில் கல்லூரி மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கொலையாளியை கைது செய்ய வலியுறுத்தி சிவகிரி சுற்றுவட்டார கிராமங்களில் பொதுமக்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகிரி அருகே கோட்டப்புதூரை சேர்ந்த விவசாயி நல்லசிவத்தின் இளைய மகள் நந்தினி (19). கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த இவரது சடலம் பாதி எரிந்த நிலையில் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பின்பகுதியில் திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிவகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியின் உடலில் உள்ள காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி பின்னர் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
மாவட்ட எஸ்.பி. பொன்னி, டி.எஸ்.பி பெரியய்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்களும், மோப்பநாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், நந்தியின் செல்போன் எண்ணில் தொடர்பில் இருந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். வேறு சிம்கார்டுகள் ஏதும் பயன்படுத்தினாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
கடையடைப்பு பேரணி
இந்நிலையில், மாணவியின் கொலை சம்பவத்தை கண்டித்து சிவகிரி, அம்மன்கோவில், சின்னியம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
மாணவியின் உறவினர்கள், சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று சிவகிரியில் பேரணியாக சென்றனர். பேரணியின் முடிவில் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த பேரணியில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாணவியின் கொலையை கண்டித்து சிவகிரியில் இன்று நடைபெற்ற கடையடைப்பு, பேரணி காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.