சென்னையில் தனியார் கம்பெனி ஊழியரை கத்தியால் குத்தி ரூ. 25 லட்சம் வழிப்பறி
சென்னை: சென்னையில் தனியார் வர்த்தக நிறுவன ஊழியரை தாக்கி அவரிடம் இருந்து ரூ. 25 லட்சத்தை 6 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்று உள்ளது. அந்த நிறுவனம் சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனங்களில் தினமும் வசூலாகும் பணத்தை அந்தந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் ஆன்லைனில் செலுத்தி வருகிறது. அந்த வர்த்தக நிறுவன ஊழியரான கமலக்கண்ணன் என்பவர் நேற்று மாலை பல்வேறு நிறுவனங்களில் வசூலிக்கப்பட்ட ரூ.25 லட்சம் ரொக்கத்துடன் திருமங்கலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து அவரை கத்தியால் குத்திவிட்டு பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடினர். இந்நிலையில் கொள்ளை கும்பலை அடையாளம் கண்டு கொண்ட போலீசார் மதுரவாயலைச் சேர்ந்த ராமச்சந்திரன், வினோத், கிஷோர், கோபி ஆகிய 4 பேரைக் நேற்று இரவு கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அருண், முத்து ஆகிய 2 பேரை வலைவீசித் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ. 17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த கமலக்கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications