கேரளாவில் தைப்பூச திருவிழாவில் மதம் பிடித்து 3 பெண்களை கொன்ற யானை
கொல்லம்: கேரளாவில் சாமி வீதி உலா சென்றபோது யானைக்கு மதம் பிடித்தது. இதையடுத்து அது தனது தந்தத்தால் 3 பெண்களை குத்திக் கொன்றது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்து உள்ளது பெரம்பாவூர் ராயன்குளம். அங்குள்ள முருகன் கோவிலில் நேற்று இரவு தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதற்காக ராமச்சந்திரன் என்ற யானையில் சாமி வீதீ உலா இரவு 7 மணியளவில் தொடங்கியது. யானை சிறிது தூரம் சாமி சிலையோடு வீதி உலா சென்று கொண்டிருந்தது.
சுமார் 2,000 பேர் இந்த ஊர்வலத்தில் சென்றனர். அப்போது யானைக்கு தீடிர் என மதம் பிடித்து ஓடியது. சாமி சிலையோடு ஓடிய யானை தனது தந்தத்தால் கூட்டத்தில் ஓடிய பெண்களில் 3 பேரை குத்திக் கொன்றது. 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் யானைகளுக்கு மதம் பிடித்து பொது மக்களை கொல்வது அதிகரித்து வருவதாகவும், உரிய பாதுகாப்பும், யானைகளுக்கு உரிய பயிற்சியும் வழங்கிட வேண்டும் என்றும் பொதுநல அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.