இந்தியா – பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!
பூஞ்ச்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேருந்து போக்குவரத்து மற்றும் வர்த்தகம் இன்றுமுதல் மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனவரி 8-ந்தேதி காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 2 இந்திய வீரர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் தலை துண்டித்து கொலை செய்தனர். இதனால் எல்லையில் பதட்டம் ஏற்பட்டு இரு நாட்டு வீரர்களும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இந்தியாவிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பஸ் போக்குவரத்தையும், வர்த்தகத்தையும் மத்திய அரசு தடை செய்தது. இதனால் இரு நாட்டு எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையே எந்த நேரமும் போர் தொடங்க வாய்ப்புள்ளது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. ஆனால் தற்போது எல்லையில் அமைதி நிலவுவதாகவும் கடந்த 10 நாட்களாக எந்த துப்பாக்கி சண்டையும் நடைபெறவில்லை என்றும் தெரிகிறது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு மீண்டும் பஸ் போக்குவரத்தையும், வர்த்தகத்தையும் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பேருந்து போக்குவரத்து
இன்று முதல் கட்டமாக காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லை வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு பேருந்து விடப்படுகிறது. திடீர் என்று போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் வந்த 100 பயணிகள் அங்கு தவிக்கிறார்கள். அவர்கள் இன்று செல்லும் பேருந்தில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதேபோல் எல்லைப் பகுதியில் நடைபெற்று வந்த வர்த்தகமும் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.
இனிப்பு கொடுத்த இந்திய வீரர்கள்
இதற்கிடையே கடந்த சனிக்கிழமையன்று இந்திய குடியரசு தினத்தையொட்டி காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். பதிலுக்கு பாகிஸ்தான் வீரர்களும் இந்திய வீரர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.இருநாட்டு ராணுவ அதிகாரிகளிடையேயான வழக்கமான கொடி அணி வகுப்பு கூட்டமும் பூஞ்ச் பகுதியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.