வடகொரியாவில் கடும் பஞ்சம்: பெற்றோரே பிள்ளைகளை கொன்று, அவித்து தின்னும் அவலம்
பாரியா: வட கொரியாவில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாரியா மாநிலத்தில் பசிக் கொடுமை தாங்க முடியாமல் பெற்றோரே குழந்தைகளை சாப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது.
வட கொரியாவில் உள்ள பாரியா மாநிலத்தில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இது தவிர வடக்கும் மற்றும் தெற்கு ஹ்வாங்ஹே மாகாணங்களிலும் மக்கள் பஞ்சத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு பசிக் கொடுமை தாங்க முடியாமல் இதுவரை 10,000 பேர் பலியாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் பசியைப் போக்க உணவு இல்லாததால் மனிதர்கள் சக மனிதர்களை கொன்று தின்னும் அவலம் அதிகரித்துள்ளது.
இப்படி மக்கள் உணவில்லாமல் இறந்து கொண்டிருக்கையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்(30) இரண்டு ஏவுகணைகளை விண்ணில் செலுத்த பெரும் தொகையை செலவு செய்துள்ளார். ஒரு பத்திரிக்கையாளர் கூறுகையில், ஒரு மனிதர் பசியால் புதைக்கப்பட்ட தனது பேரக்குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து சாப்பிட்டார். இன்னொருவரோ தனது குழந்தையை வேக வைத்து சாப்பிட்டார் என்றார்.
பஞ்ச கொடுமை குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் கூறுகையில்,
எங்கள் கிராமத்தில் கடந்த மே மாதம் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்று சாப்பிட முயன்ற ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த நபர் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் முதலில் தனது மகளைக் கொன்றுள்ளார், அதை மகன் பார்த்தால் அவனையும் கொன்றுள்ளார். மனைவி வீடு திரும்பியதும் இன்று சாப்பிட நமக்கு கறி கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மனைவி இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க அவர்கள் வந்து வெட்டி எடுத்தது போக மீதமுள்ள உடல்களைக் கண்டுபிடித்தனர்.
சோங்டான் கவுன்ட்டியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் நபர் பசிக் கொடுமை தாங்க முடியாமல் தனது குழந்தையையே வேக வைத்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
1990களில் வட கொரியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டு 240,000 முதல் 3.5 மில்லியன் பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.