இலங்கைக்கு எதிராக மேலும் ஒரு தீர்மானம்... அமெரிக்கா முடிவு
கொழும்பு: இலங்கைக்கு எதிராக ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்த அமெரிக்கா தற்போது மேலும் ஒரு புதிய தீர்மானத்தைக் கொண்டு வந்து இலங்கை அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
2009ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு சில நாட்களிலேயே லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொடூரமாக கொன்று குவித்து போரை முடித்து விட்டதாகவும், விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டதாகவும், புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக் கொன்று விட்டதாகவும் பிரகடனம் செய்தது இலங்கை அரசு.
அன்று முதல் இன்று வரை தங்களது தாயகத்தில், சிங்களர்களின் ஆதிக்கத்தின் கீழ் அவஸ்தைப்பட்டு வருகின்றனர் ஈழத் தமிழர்கள். ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த படுகொலைகளுக்கு இலங்கே ராணுவமே பொறுப்பு என்று அனைத்துத் தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அமெரிக்கா, போர் குற்றம் புரிந்த இலங்கை அரசு மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் பிரச்சினை எழுப்பியது. இதற்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்ததுடன் போர் குற்ற விசாரணைக்கும் மறுப்பு தெரிவித்தது.
இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஒரு தீர்மானத்தையும் கொண்டு வந்தது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா ஓட்டுப் போட்டது,தீர்மானமும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இதேபோல இன்னொரு தீர்மானத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஜேம்ஸ் முர்ரே கூறுகையில், போர்குற்றம் புரிந்த இலங்கை ராணுவத்தின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். அதை வலியுறுத்தி மீண்டும் ஒரு நடைமுறை தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வருகிறது. வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை கமிஷன் கூட்டத்தில் அந்த தீர்மானம் சமர்பிக்கப்படும்.
இலங்கையில் மனித உரிமை, பொறுப்பு மற்றும் சமரசம் குறித்த விஷயங்களில் அரசு நடவடிக்கை எடுப்பதாக காட்டிக்கொண்டாலும், அது முழுமையாக நடைபெறவில்லை. இலங்கை தன் மக்கள் மீதான வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அவசியம் ஆகிறது. அமெரிக்காவும் மற்ற ஐ.நா. மனித உரிமை அமைப்பின் 23 உறுப்பு நாடுகளும் இதையே நம்புகிறது என்றார்.
இந்தத் தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போதே எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications