அதிமுகவுக்கு முதல் எம்.பியைக் கொடுத்த திண்டுக்கல் மாநகராட்சியாகிறது
திண்டுக்கல்: 150 ஆண்டு கால பழமை வாய்ந்த நகராட்சியான திண்டுக்கல், விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவுக்கு முதல் தேர்தல் வெற்றியைக் கொடுத்த, முதல் எம்.பியைக் கொடுத்த நகரம் திண்டுக்கல். அத்தகைய திண்டுக்கல் நகராட்சி, அதிமுக ஆட்சியில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி ஆகிய 10 மாநகராட்சிகள் உள்ளன. இதில் திண்டுக்கல்லும் இணைந்தால் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 11 ஆக உயரும்.
தென் மாவட்டங்களில் முக்கிய நகரம்
தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய நகரங்கள் வரிசையில் திண்டுக்கல்லும் ஒன்றாக விளங்குகிறது. வியாபார நகரமாகவும் இது விளங்குகிறது.
தோல் -பூட்டு - மலைக்கோட்டையால் பிரபலம்
பூட்டு, தோல் தொழிற்சாலைகளுக்குப் பெயர் போனது திண்டுக்கல். குறிப்பாக திண்டுக்கல் பூட்டு மிகவும் பிரபலமானது. அதேபோல மலைக்கோட்டையும் இங்கு பிரபலமானது.
150 ஆண்டு பழமை
திண்டுக்கல் நகரின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது திண்டுக்கல் நகராட்சி. இந்த நகராட்சி மாவட்டத்தின் தலைமையிடமாகவும், மிகவும் பழமைவாய்ந்த நகராட்சியாகவும் இருந்து வருகிறது. 150-வது ஆண்டை நெருங்கிக்கொண்டு இருக்கும் இந்த நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக இருந்து வருகிறது.
மக்கள் தொகை கிட்டத்தட்ட 3 லட்சம்
திண்டுக்கல் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தற்போது கிட்டத்தட்ட 3 லட்சம் மக்கல் வசித்து வருகின்றனர். இதன் பரப்பளவு 14.01 சதுர கிலோமீட்டர் ஆகும்.
அதிகரிக்கும் புறநகர்கள்
கடந்த சில ஆண்டுகளாக தொழில், கல்வி, வர்த்தகம் ஆகியவற்றில் திண்டுக்கல் வேகமாக வளர்ந்து வருவதால் நகர மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் பல்வேறு புறநகர்ப் பகுதிகளும் உருவாகி மக்கள் பெருக்கும் அதிகரித்துள்ளது.
மாநகராட்சியாக உயர்த்த திட்டம்
இந்த நிலையில் தற்போது திண்டுக்கல் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தும் நடவடிக்கைகளில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக இறங்கிவிட்டது. திண்டுக்கல்லை மாநகராட்சியாக உயர்த்துவதற்கு இசைவு தெரிவிப்பதைப்போல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நகராட்சி மண்டல இயக்குனர், நிர்வாக ஆணையர் அலுவலக கடிதங்கள் நகராட்சிக்கு வரப்பெற்று உள்ளது. அந்த கடிதத்தில் திண்டுக்கல் நகராட்சியை தகுதிநிலை உயர்த்திட உரிய கருத்துருவை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கூறப்பட்டுள்ளது.
அனுமதி கோரும் கருத்துரு ரெடி
நகராட்சி நிர்வாக ஆணையர் பரிந்துரைப்படி (அரசாணை எண்.237) நகராட்சி நிர்வாகம் திண்டுக்கல் நகராட்சியை தரம் உயர்த்தவும், நகர எல்லைகளை நீட்டித்து மாநகராட்சியாக அமைய அரசுக்கு அனுமதி கோரியும் கருத்துரு அனுப்ப தயார் நிலையில் உள்ளது. இதற்கான தீர்மானம் தயாரிக்கப்பட்டு இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் நகராட்சி கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
விரைவில் அறிவிக்கப்படும்
இந்த தீர்மானம் ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் சூழ்நிலையில் விரைவில் திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
அதிமுகவுக்கு முதல் எம்.பியைக் கொடுத்த ஊர்
திண்டுக்கல் அரசியல் ரீதியாகவும் முக்கியமான ஊராகும். அதாவது தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் கட்சியாக திகழும் அதிமுக பிறந்ததும் நடந்த முதல் தேர்தலில் அதற்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த ஊர்தான் திண்டுக்கல். 1972ல் அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். அதன் பின்னர் 1973ல் திண்டுக்கல் லோக்சபா தொகுதி இடைத் தேர்தல் வந்தது. அதிமுல அதிமுக போட்டியிட்டு பெரிய வெற்றியைப் பெற்றது. அரசில் ரீதியான அங்கீகாரத்தையும் அது பெற்றது.
ஜெயலலிதா ஆட்சியில் மாநகராட்சியாகிறது
அப்படிப்பட்ட திண்டுக்கல் அதிமுக ஆட்சியில் மாநகராட்சியாவது குறிப்பிடத்தக்கது.