ரகசிய சிறைகள், டார்ச்சர்.. சிஐஏ-அமெரிக்காவுக்கு உதவிய 54 நாடுகள்
வாஷிங்டன்: செப்டம்பர் 11 நியூயார்க் தாக்குதல் நடந்த பிறகு உலகம் முழுவதும் 54 நாடுகள் அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்புக்கு ஆட்களை ரகசியமாக கைது செய்யவும், ரகசிய இடங்களில் வைத்து விசாரிக்கவும் உதவி செய்ததாக Globalizing Torture என்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் அம்ரித் சிங்.
அமெரிக்காவின் Open Society Justice Initiative என்ற மனித உரிமை அமைப்பில் பணியாற்றி வரும் அம்ரித் சிங், மன்மோகன் சிங் அமெரிக்கா சென்று அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் பேச்சு நடத்திக் கொண்டிருந்தபோதே, ஈராக்-ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் மனித உரிமை மீறல்களை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
214 பக்க அறிக்கை:
இந் நிலையில் அம்ரித் சிங் தலைமையிலான டீம் உலகம் முழுவதும் விசாரணை நடத்தி வெளியிட்டுள்ள 214 பக்க அறிக்கையில்,
இந்த நாடுகள் தங்களுடைய மண்ணில் அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பு தனி சிறைகளை நடத்திக் கொள்ள அனுமதித்தன. வெளியில் தெரியாமல் கைது செய்யப்பட்ட கைதிகளை ரகசியமாக உலகின் பல நாடுகளுக்கும் கொண்டு செல்ல இந்த நாடுகள் தங்களது விமானத் தளங்களை தந்து உதவின.
136 கைதிகள்:
இவ்வாறு 136 கைதிகள் பிற நாடுகளில் வைத்து கைது செய்யப்பட்டு, உலகின் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். புஷ் அதிபராக இருந்தபோதே இந்தப் பணிகள் அதிகமாக நடந்தன.
ரகசியமாக கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரிய நபர்கள் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு எந்தவித சட்டபூர்வமான நடைமுறைகளும் இல்லாமல் மாற்றப்பட்டனர். உள்நாட்டு அதிகாரிகளுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்கா மேற்கொண்ட இத்தகைய நடவடிக்கைகளுக்குகான செலவுகளை அந்நாட்டு அரசு மட்டுமின்றி அதற்கு உதவிய 54 நாடுகளும் ஏற்றுக் கொண்டன.
சிஐஏ உளவு அமைப்பு:
மேலும் புஷ்ஷின் ஆட்சியில் விசாரணை என்ற பெயரில் கைதிகள் நடத்தப்பட்ட விதமும் மிகக் கொடுமையானதாக இருந்தது. அல் கொய்தா தீவிரவாதிகளைப் பிடிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவிகள் பலரும் கூட கைது செய்யப்பட்டு மிகவும் கண்டித்தக்க விசாரணை முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர்.
இந்த விஷயத்தில் சிஐஏ உளவு அமைப்புக்கு 25 ஐரோப்பிய நாடுகளும், 14 ஆசிய நாடுகளும், 13 ஆப்பிரிக்க நாடுகளும், கனடாவும் ஆஸ்திரேலியாவும் உதவின.
ஆப்கானிஸ்தானில் 3 ரகசிய சிறைச்சாலைகள்:
ஆப்கானிஸ்தானி்ல் காபூலிலும், பாக்ராம் விமானத் தளத்திலும் 2 ரகசிய சிறைச்சாலைகளை சிஐஏ நடத்தியது. அதில் கைதிகள் ரகசியமாக கொண்டு செல்லப்பட்டு கடுமையான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். மூன்றாவதாக டார்க் பிரிசன் என்ற கும் இருட்டு சிறையையும் சிஐஏ நடத்தியது. இதில் 24 மணி நேரமும் கும் இருட்டு தான். இதில் வைத்தும் ஏராளமானோர் கொடுமைப்படுத்தப்பட்டனர். இந்தக் கைதிகளை யாரும் தொடர்பு கொள்ளவும் முடியாது, அவர்களுக்கு வக்கீல் இல்லை, இவர்கள் இங்கு இருப்பது கூட யாருக்கும் தெரியாது.
பாகிஸ்தான்:
பாகிஸ்தானிலும் சிஐஏ பல ரகசிய சிறைகள், விசாரணை மையங்களை நடத்தி வந்தது. இங்கு வைத்து மிகக் கொடுமையான விசாரணைகள் நடந்துள்ளன. இதற்கு பாகிஸ்தான் அரசும் உடந்தையாக இருந்தது.
இலங்கை:
சிஐஏவின் விமானங்கள் கைதிகளுடன் வந்து செல்லவும், ரகசியமாக எரிபொருள் நிரப்பிக் கொண்டு உலகின் பல பகுதிகளுக்கும் செல்லவும் இலங்கை முழு உதவி புரிந்தது.
ஈரான்:
சிஐஏவால் தேடப்பட்ட 15 பேரை ஈரான் சிறைபிடித்து ஆப்கானிஸ்தானிடம் ஒப்படைத்தது. அவர்களை ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிடம் ஒப்படைத்தது. இவர்கள் சிஐஏவின் கொடுமையான விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இந்தோனேஷியா:
இந்தோனேஷியாவும் அமெரிக்கா கோரிய நபர்களை ரகசியமாக கைது செய்து சிஐஏவிடம் ஒப்படைத்தது.
மலேசியா:
லிபியாவைச் சேர்ந்த அபு அப்துல்லா அல் சாதிக் மற்றும் அவரது மனைவி பாத்திமா பெளஷரை மலேசிய அரசு கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்து சிஐஏவிடம் ஒப்படைத்தது.
தாய்லாந்து:
அமெரிக்காவின் ரகசிய சிறைச்சாலை தாய்லாந்திலும் திறக்கப்பட்டது. இங்கு ஏராளமானோர் ரகசியமாக வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். மேலும் சிஐஏவின் விமானங்கள் ரகசியமாக வந்து செல்லவும் தாய்லாந்து உதவியது.
ஹாங்காங்:
சீன அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஹாங்காங்கிலும் அமெரிக்காவுக்கு பல உதவிகள் கிடைத்தன. லிபியாவைச் சேர்ந்த சமி அல் சாதியை ஹாங்காங் போலீசார் செல் லாப் கோக் விமான நிலையத்தில் வைத்து ரகசியமாக கைது செய்து சிஐஏவிடம் ஒப்படைத்தனர்.
சித்ரவதை மற்றும் ரகசிய காவலின்போது நடைபெற்ற மற்ற குற்றங்கள் போன்றவற்றின் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்களை அமெரிக்கா மீறியுள்ளது. மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அமெரிக்கா செயல்பட்டுள்ளது என்று அம்ரித் சிங் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மன்மோகன் சிங்கின் 3வது மகள்:
மேலும் செளதி அரேபியா, எகிப்து, லிபியா, ஸ்வீடன், டென்மார்க், பெல்ஜியம், பின்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்திரேலியா, கனடா, லிதுவேனியா, ருமேனியா, போலந்து உள்ளி்ட்ட நாடுகளும் இதில் இடம் பெற்றுள்ளன. நல்லவேளையாக இந்தியாவின் பெயர் இதில் இல்லை.
பிரதமர் மன்மோகன் சிங்கின் 3 மகள்களில் இளையவரான இவர் கேம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் பொருளாதாரமும் பின்னர் யேல் சட்டப் பள்ளியிலும் சட்டம் படித்தவர். முன்னதாக வாஷிங்டனில் சர்வதேச நிதியத்தின் (IMF) தலைமை அலுவலகத்தில் பொருளாதார வல்லுனராகவும் பணியாற்றியுள்ளார்.
நியூயார்க் பல்கலைக் கழகத்தில் சட்ட பேராசிரியராக பணிபுரியும் பார்டன் பீபே என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ள அம்ரித் நியூயார்க்கில் கணவருடன் வசிக்கிறார்.