எதிரிகள் வெட்கப்படும் அளவுக்கு அனைத்தையும் செய்கிறார் ஜெ... அமைச்சர் விஸ்வநாதன்
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 3 கிராம ஊராட்சிகளில் தமிழகஅரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வாதன் பேசுகையில்,
முதல்வர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகிறது. அவர் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்.
விலையில்லா அரிசி, திருமண உதவித்திட்டம், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, முதியோர் உதவித்தொகை, கல்வித்துறையில் புரட்சி, லேப்டாப், ஊக்கத்தொகை, சைக்கிள், பாடப்புத்தகங்கள், சீருடை என அவர் அளித்த வாக்குறுதிகள்.
இந்த நிறைவேற்ற முடியுமா என்று கிண்டல் செய்தவர்கள் வெட்கப்படும் அளவிற்கு அனைத்தையும் செய்து சாதனை தலைவியாக விளங்கி வருகிறார்.
முதல்வரால் தீர்க்க முடியாத ஒன்றே ஒன்று மின் வெட்டு. அதற்கு காரணம் முந்தைய திமுக அரசு. ஆனால் அப்படி சொல்லிவிட்டு ஒதுங்கி விடாமல் மத்திய அரசு, இயற்கை என அனைத்தும் வஞ்சித்தாலும் புயல்வேக செயல்பாடுகளால், வரும் டிசம்பர் மாதம் வரை படிப்படியாக குறைந்து, இந்த 2013ம் ஆண்டு முடிவடையும்போது, முற்றிலுமாக மின்வெட்டு தீர்க்கப்படும்.
மின்திட்டங்களை திமுகவினர் கிடப்பிலே போட்டு விட்டார்கள். அதனால்தான் இன்று மின்வெட்டு ஏற்படுகிறது. தமிழகம் வரலாறு காணாத வறட்சியை சந்திதுள்ள நிலையில், தனது சொந்த திறமையால், மக்களின் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாவலனாக விளங்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து ஆதரவு தரவேண்டும் என்றார் அவர்.