விவிஐபிகளுக்கான ஹெலிகாப்டர் கொள்முதல்- 'இத்தாலி' நிறுவனங்களின் தலைவர்கள் கைது!

இத்தாலியைச் சேர்ந்த பின்மெக்கானிகா நிறுவனம் அந்நாட்டின் மிகப் பெரிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று. இதன் ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனம் அகஸ்டா வெஸ்ட்லேண்ட். இந்தியா போன்ற வெளிநாடுகளிலிருந்து பாதுகாப்பு தளவாட ஆர்டர்களைப் பெற்று தயாரித்து தருவது இதன் பணி. இந்நிறுவனத்தில் இத்தாலிய அரசுக்கும் 30% பங்குகள் உண்டு.
இந்தியாவில் முக்கிய பிரமுகர்கள் பயணத்துக்காக விமானப் படையில் MI-8 ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவற்றுக்குப் பதிலாக புதிய ஹெலிகாப்டர்களை வாங்க 2010-ம் ஆண்டு மத்திய அரசு முடிவு செய்தது. இந்த ஆர்டரைப் பெறுவதில் தீவிரம் காட்டியது இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம். இந்தியாவைச் சேர்ந்த பிரிகேடியர் ஒருவரும் இந்நிறுவனத்தின் தரகரை அணுகிப் பேசியிருக்கிறார். ஒரு வழியாக பேரம் முடிவடைந்து ரூ. 3,546 கோடி மதிப்பிலான ஆர்டரைப் பெற்றது இத்தாலிய அகஸ்டா வெஸ்ட்லேண்ட்.
இந்தியாவின் இந்த ஆர்டரை இத்தாலியின் பின்மெக்கானிகாவும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட்டும் லஞ்சம் கொடுத்துப் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இத்தாலிய அரசாங்கம் முதலில் விசாரணை நடத்தியது. பின்னர் இந்தியாவிலும் இந்த ஊழல் வெடிக்கவே வேறு வழியின்றி மத்திய அரசும் விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் ஊழல் நடந்தது உறுதியானால் இந்த ஆர்டரையும் ரத்து செய்வோம் என்றும் பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்திய ஹெலிகாப்டர்களுக்கான ஆர்டரைப் பெற பின்மெக்கானிகா மற்றும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஆகிய நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்திருப்பது உறுதியானதால் இவற்றின் தலைமை அதிகாரிகளை இத்தாலி அரசு கைது செய்திருக்கிறது.
இதன்படி கிஸ்பி ஓர்சி கைது செய்யப்பட்டுள்ளார். பர்னோ ஸ்பங்னோலினியை கைது செய்து வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் சுவிஸ் நாட்டில் பதுங்கியிருக்கும் 2 தரகர்களை நாடு கடத்த கோரவும் இத்தாலி அரசு முடிவு செய்திருக்கிறது.
இந்த ஊழலில் ரூ. 470 கோடி வரை இந்தியாவில் லஞ்சம் கைமாறியிருப்பதாகத் தெரிகிறது. இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறதோ?












Click it and Unblock the Notifications