அடிக்கடி செல்போன் பாக்கறீங்களா? அப்ப இதைப் படிங்க!
ஆறரை நிமிடத்திற்கு ஒருமுறை என நாளொன்றுக்கு 150 முறை ஒவ்வொருவரும் தங்களின் செல்போனை பார்ப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஒருநாளின் பெரும்பகுதியில் செல்ஃபோனை நம்பியே வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள், எத்தனை முறை ஃபோனை பார்க்கின்றனர் என்பது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ருசிகர முடிவு வெளிவந்துள்ளது.
சர்வதேச அளவில் மாதிரி அடிப்படையில் இந்த ஆய்வு நடைபெற்றது. அலாரம் வைப்பது, கேம்ஸ் விளையாடுவது, பாடல்களை மாற்றுவது, படம் பிடிப்பது, சார்ஜ் செய்வது என அனைத்து விஷயங்களும் இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக டாம் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
150 முறை சோதனை
ஸ்மார்ட்ஃபோன் வைத்திருப்பவர்கள், காலை கண்விழிப்பது முதல் 16 மணி நேரத்தில் சராசரியாக 150 முறை அதை சோதிப்பதாக தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆறரை நிமிடத்துக்கு ஒருமுறை செல்ஃபோனை மக்கள் சோதிப்பதாக டாமி என்ற செல்ஃபோன் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
23 முறை எஸ்.எம்.எஸ்
அடிப்படை மாடல் செல்ஃபோன் பயன்படுத்துவோரும் அடிக்கடி அதை பார்ப்பதாக ஆய்வு தெரிவிக்கும் நிலையில், சராசரியாக தினம் 23 முறை எஸ்.எம்.எஸ்.களை பெறுவது அல்லது அனுப்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.