உச்சிப்புளியில் ரயில்வே கேட்டில் சரக்கு வேன் மோதியதில் தம்பி பலி, அண்ணன் உயிர் ஊசல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரயில்வே கேட்டில் நின்று கொண்டிருந்த பைக் மீது சரக்கு வேன் மோதியதில் ஒருவர் பலியானார்.
ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிபுளியில் இருக்கும் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இன்று காலை 11.30 மணிக்கு திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் ரயில் கடந்து செல்வதற்காக கேட் முடப்பட்டது. இதனால் கேட்டின் இரு புறமும் ஏராளமான வாகனங்கள் நின்றன.
அப்போது ரயில் கேட்டை கடந்து சென்றது. அந்த நேரம் மண்டபத்தில் இருந்து வந்த சரக்கு வேன் ஒன்று பிரேக் பிடிக்காமல் கேட்டை நோக்கி வேகமாக வந்தது. அந்த வேன் கேட் அருகே நின்ற பைக்கின் மீது மோதிய கையோடு ரயில்வே கேட்டிலும் மோதியது. இதில் மண்டபம் மேற்கு தெருவைச் சேர்ந்த ரபீக் (30), அவரது அண்ணன் சாகுல் ஹமீது (42), கார்மேகம் (21) மற்றும் வேன் டிரைவர் இந்திரஜித் (40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ரயில்வே கேட் சுக்குநூறாக உடைந்தது.
ரயில் ஏற்கனவே கேட்டை கடந்துவிட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. படுகாயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரபீக் இறந்தார். அவரது அண்ணன் சாகுலின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடைந்த ரயில்வே கேட்டை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.