பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20, 21ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
இது குறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகளின் சங்க அவை தலைவர் ஸ்ரீதரன், பொதுச் செயலாளர் நாகராஜன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதற்கு ஆதரவு தரும் வகையில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது.
தேசிய உடமையாக்கப்பட்ட 26 வங்கிகளை 7 வங்கிகளாக இணைப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்வதை எதிர்க்கிறோம். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணியில் இருக்கும்போது இறந்த அதிகாரிகளின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். இதை மத்திய அமைச்சர் சொல்லியும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. ஸ்டேட் பாங்க் அதிகாரிகளுக்கு 6.4 சதவீத அடிப்படை சம்பள உயர்வு அளித்தது போல இதர வங்கி அதிகாரிகளுக்கும் சம்பள உயர்வு அளிக்கப்பட வேண்டும். வங்கி அதிகாரிகளின் வேலை நேரத்தை வரையறுக்க வேண்டும்.
எனவே, இது குறித்து தொழிற்சங்கத்தை அழைத்து பேச வேண்டும். இந்த முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் வங்கி அதிகாரிகள் சங்கமும் கலந்து கொள்கிறது என்றனர்.
இந்த வேலைநிறுத்தத்தால் இந்தியா முழுவதும் ரூ. 35,000 கோடிக்கு பணப் பரிவர்த்தனை பாதிக்கும் என கூறப்படுகின்றது.