நடைபயணத்தின்போது வைகோவுடன் ஜெயலலிதா திடீர் சந்திப்பு!
தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வைகோ நடைபயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று கோவளத்தில் தொடங்கிய பயணம் இரவு திருப்போரூரில் முடிவடைந்தது.
இன்று காலையில் திருப்போரூரில் பயணத்தை தொடங்கிய வைகோ சிறுதாவூர் வழியாக மாமல்லபுரம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா தனது சிறுதாவூர் பங்களாவிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். நடைபயணத்தில் ஈடுபட்டிருந்த வைகோவை பார்த்த ஜெயலலிதா, உடனடியாக காரை நிறுத்த உத்தரவிட்டார். பின்னர் காரிலிருந்து இறங்கி வைகோவிடம் சென்று பேசினார்.
அப்போது, மதுவினால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும், மதுவிலக்கு அமல்படுத்தவேண்டியதன் அவசியம் பற்றியும் முதல்வர் ஜெயலலிதாவிடம் வைகோ விளக்கியதாக தெரிகிறது.
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இருவரும் சந்தித்துள்ளது பரபரப்பையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது கடைசி வரை காக்க வைத்து கடுப்பேற்றி கூட்டணியை விட்டு வைகோவை வெளியேற்றியது அதிமுக என்பது நினைவிருக்கலாம். அதனால் அதிருப்தியுள்ள மதிமுக தேர்தலிலேயே போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.