வருமான வரியில் மாற்றம் இல்லை: ஆண்டுக்கு ரூ. 2,000 மட்டும் குறையும்!
ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
2013-2014ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் லோக்சபாவில் இன்று தாக்கல் செய்தார். எவ்வளவு வரியை விதிக்கப் போகிறாரோ என்று கலக்கத்தில் இருந்தவர்களுக்கு அவரின் அறிவிப்பு ஆறுதலாக உள்ளது.
வருமான வரி குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு,
ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் ஈட்டும் தனி நபர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும். இதன்மூலம் 42,800 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும்.
அதே போல ஆண்டுக்கு ரூ. 10 நிறுவனங்களுக்கு 5 முதல் 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும்.
ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு ரூ.2000 வரிச் சலுகை அளிக்கப்படும். அதாவது நீங்கள் கடந்த ஆண்டு ரூ. 35,000 வரி கட்டியிருந்தால் இந்த ஆண்டு ரூ. 33,000 கட்டினால் போதும். இதனால் 1.8 கோடி பேர் பலனடைவார்கள்.
ஏற்கனவே உள்ள வருமான வரியில் மாற்றம் ஏதும் இல்லை. இப்போது இருந்து வரும் வருமான வரியே தொடரும்.
அதாவது, ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி எதுவும் இல்லை. ரூ. 2 முதல் ரூ. 5 லட்சம் வருமானம் உள்ளவர்கள் 10 சதவீத வரி கட்ட வேண்டும். ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 20 சதவீத வரி செலுத்த வேண்டும். ஆண்டுக்கு 10 லட்சத்துக்கு மேல் ஊதியம் உள்ளவர்கள் 30 சதவீதம் வரி கட்ட வேண்டும்.