இந்திய-இலங்கை இடையே கைதிகள் பரிமாற்றம்: தமிழக கைதிகள் சென்னை வருகை
சென்னை: இந்தியா- இலங்கை அரசுகள் இடையேயான கைதிகளைப் பரிமாற்றம் ஒப்பந்தப்படி முதல் கட்டமாக இலங்கை சிறைகளில் வாடிய தமிழக கைதிகள் இருவர் விமானம் மூலம் தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
ஒப்பந்தம்
இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கை கைதிகளையும் இலங்கையில் இருக்கும் இந்திய கைதிகளையும் பரிமாற்றம் செய்து கொள்வதற்காக இருநாடுகளிடையே அண்மையில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.இதன்படி இலங்கையில் உள்ள இந்திய கைதிகள், தண்டனைக் காலத்தை இங்குள்ள சிறையிலும் இலங்கை கைதிகள் அங்குள்ள சிறையில் தண்டனைக் காலத்தை அனுபவிப்பர் எனக் கூறப்படுகிறது.
14 பேர் விவரம்
இந்த ஒப்பந்தத்தின்படி தமிழக அரசின் வலியுறுத்தலால் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 14 கைதிகள் அந்த நாட்டு சிறைகளில் இருந்து, தமிழக சிறைகளுக்கு முதல் கட்டமாக மாற்றப்படுகின்றனர். இதில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கண்ணுசாமி என்ற கண்ணன், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முருகையன் தியாகராஜன், ஒரத்தநாட்டைச் சேர்ந்த பிச்சையன் தியாகராஜன், நாமக்கல்லைச் சேர்ந்த பழனியப்பன் உதயகுமார், திண்டுக்கல்லைச் சேர்ந்த செய்யது காசிம், கபீர் சாகுல்ஹமீது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த முனீர் அபுபக்கர், ராஜகோபால் யோகராஜ், தேனியைச் சேர்ந்த சின்னசாமி என்ற மணி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த முனியசாமி, பாலசாமி, தங்கவேல் என்ற கண்ணன், செல்வராஜ் என்ற முருகவேல், நாகரத்தினம் என்ற மணிவேல் ஆகிய 14 பேர் அடக்கம்.
இவர்களில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அந் நாட்டு நீதிமன்றம் அதை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இவர்கள் விமானம் மூலம் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.
இதில் முதல் கட்டமாக நேற்று இரவு 8.30 மணிக்கு வந்த விமானத்தில் செய்யது காசிம், பழனியப்பன் உதயகுமார் ஆகிய இருவரும் வந்தனர்.இன்று இரவுக்குள் மற்ற கைதிகளும் சென்னைக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைவரும் முதலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்படுகின்றனர். பின்னர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு மாற்றப்படுவர்.












Click it and Unblock the Notifications