டாஸ்மாக்கில் வேலை பார்த்ததை பாவமாக கருதுகிறேன்..அரசு அதிகாரி பரபரப்பு பேச்சு
சென்னை: சினிமா நமது கலாச்சாரத்தை, குழந்தைகளை சீரழித்து விட்டது. டாஸ்மாக்கில் நான் வேலை பார்த்தேன். அதை பெரு்ம் பாவமாக கருதுகிறேன் என்று தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், அரசு அருங்காட்சியகங்களின் ஆணையாளருமான எஸ்.எஸ்.ஜவஹர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் முக்கிய வருவாய் ஆதார கேந்திரமாக டாஸ்மாக்தான் விளங்குகிறது. டார்கெட் போட்டு டாஸ்மாக் கடைகளை ஓட்டிக் கொண்டிருக்கிறது அரசு.
ஊரெங்கும் பார்களடா என்று பேசும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகளும், பார்களுமாகத்தான் உள்ளது. இந்த நிலையில் டாஸ்மாக்கில் வேலை பார்த்ததை பாவம் என்று கூறியுள்ளார் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜவஹர்.
சென்னையைச் சேர்ந்த மைத்ரி என்ற மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சேவை நிறுவனத்தின் 19வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு ஜவஹர் பேசியதிலிருந்து சில பகுதிகள்...
பெற்றோர்கள் சரியில்லை
இந்த கால பெற்றோர் குழந்தைகளை சரியாக வளர்ப்பதில்லை. இதனால், குழந்தைகள் சினிமா, டிவிகளில் மூழ்கி அடிமையாகுகின்றனர்.
கலாச்சாரம் போய் விட்டது
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வசிப்பவர்கள் பரதநாட்டியம், மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றை கேட்டு தெரிந்து கொள்கின்றனர். சினிமாவால் ஏற்பட்ட கலாசாரத்தால், நம்முடைய தமிழ் பண்பாட்டை இழந்து வருகிறோம். இதனால், நான் மிகவும் வேதனை அடைகிறேன்.
சினிமாவால் குழந்தைகள் கடும் பாதிப்பு
சினிமாவால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். பெற்றோர் குழந்தைகளுக்கு நம்முடைய பாரம்பரியத்தை சொல்லி கொடுக்க வேண்டும்.
டாஸ்மாக்கில் வேலை பார்த்தது பாவம்...
நான் டாஸ்மாக் துறையில் பணியாற்றியதை பாவமாக கருதினேன். ஆண்டுக்கு ஆண்டு அதன் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து, நமது பண்பாட்டை சிதைத்தது. மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளராக பணியாற்றிய போது, அந்த பாவத்திற்கு பரிகாரம் தேடிக்கொண்டேன் என்றார் ஜவஹர்.