மகா சிவராத்திரிக்கு அரசு விடுமுறை: ஜெயலலிதாவுக்கு மதுரை ஆதீனம் கோரிக்கை
இது குறித்து மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்துக்களின் (சைவப்பெருமக்களின்) முக்கிய விழாவாக உள்ளது மகா சிவராத்திரி தினமாகும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும், சமய நிறுவனங்களிலும் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகளும், நான்கு கால பூஜையும் நடப்பது மகா சிவராத்திரி தினத்தில் தான். சிவபெருமான்-பார்வதி தேவியாருக்கு பிரியமான நாள் மகா சிவராத்திரி.
இந்த நாள் நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி மிகச்சிறப்புடையதாகும்.
சிவராத்திரி தினத்தன்று உண்ணாமல், உறங்காமல், கண் விழித்திருந்து, விரதம் இருந்து சிவபூஜை செய்வதும், கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
ஒவ்வொருவரும் தம் வாழ்வில் பண்பாடுடனும், மனிதத்தன்மையுடனும் இருந்து உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்திருந்து தூய ஆடைகள் அணிந்து திருநீரு பூசி சிவபெருமானை மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும்.
மகா சிவாராத்திரி தினத்தன்று சிவனுக்கு இரவு முழுவதும் உரிய மந்திரமான நமசிவாயா மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருந்தால் இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்பது திருஞான சம்பந்த பெருமானின் ஆழமான உறுதியான கருத்தாகும்.
இப்படிப்பட்ட அருமையான மகா சிவாராத்திரி தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவித்தால் பக்தர்களுக்கு மிகுந்த நன்மையாக இருக்கும். இதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.