தனி ஈழம் கோரி தொடரும் போராட்டம்: சென்னையில் மாணவர்கள் அமைதி ஊர்வலம்
சென்னை: தனி ஈழம் கோரி சென்னை மெரீனாவில் இருந்து உயர்நீதிமன்றம் வரை வரும் ஞாயிறன்று கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் அமைதி ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சென்னை லயலோ கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கிய போதும் ஓரிரு நாளில் முடித்துவிடுவார்கள், சின்ன பசங்க வெள்ளாமை வீடு சேராது என்றார்கள்.
அரசியல்வாதிகள் அந்த போராட்டத்தை கலைக்க முயன்றபோது ஆளும் அரசு நள்ளிரவு கைதுகள் நடத்திய போது முடிந்ததடா என்றார்கள், ஆனால் மாநிலம் முழுதும் பற்றிக்கொண்டது போராட்டத் தீ.

அண்ணா பல்கலை மாணவர்கள்
எந்நேரமும் செமஸ்டர், மார்க், கேம்பஸ் இண்டர்வியூ, ஐந்திலக்க சம்பளம் என்று பெயர் போன தமிழகத்தின் முதன்மையான பொறியியல் கல்லூரி அண்ணா பல்கலைக்கழகமும், எம்.ஐ.டி மாணவர்களும் நாளை முதல் போராட்டத்தில் குதிப்பதாக அறிவித்துள்ளார்கள்.

சென்னையில் அமைதி ஊர்வலம்
தனி ஈழக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரீனாவில் இருந்து உயர்நீதிமன்றம் வரை வரும் ஞாயிறன்று கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் அமைதி ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

திருச்சியில் அனல்
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பெரும் திரளாக திருச்சி-புதுகை சாலையில் உண்ணாநிலை அறப் போராட்டத்தை துவங்கி உள்ளனர்.

முழங்கால் போராட்டம்
திருவண்ணாமலையி்ல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலைகளில் முழங்கால் போட்டு மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்புக் கொடி ஓடிப்போன தங்கபாலு
காங்கிரஸ் கட்சியின் முன்னால் மாநில தலைவர் தங்கபாலு மன்னார்குடியில் ஒரு திருமண நிகழ்ச் சிக்காக வந்திருந்தார். இவரது வருகை பற்றி அங்குள்ள தமிழ் உணர்வாளர்களுக்கு தெரிந்ததும் திராவிடர் விடுதலைக் கழகம் காளிதாஸ் தலைமையில் திரண்ட உணர்வாளர்கள் தங்கபாலு திரும்பி வரும் போது கருப்பு கொடி காட்ட தயாராக இருந்தனர். தமிழ் உணர்வாளர்களின் கருப்பு கொடி திட்டம் தெரிந்ததும் தங்கபாலு மாற்று வழியில் சென்றுவிட்டார்.

அஞ்சலகத்தில் கல்வீச்சு
புதுக்கோட்டையில் பிருந்தாவனம் என்ற இடத்தில் கூடிய சுமார் 200 மாணவர்கள் இந்திய, இலங்கை அரசுகளுக்குஎதிராக கோஷங்களை போட்டபடி பேரணியாக வந்தவர்கள் மருத்துவமனை சாலையில் திரும்பியதும் எதிரில் உள்ள அஞ்சலகத்தில் கல்வீசினார்கள். அதே இடத்தில் சாலை மறியலும் செய்தனர்.

பொள்ளாச்சி வகுப்பு புறக்கணிப்பு
இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு ஈழத்தில் ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications