சஞ்சய் தத் தண்டனையை குறைத்தால் கோர்ட்டுக்கு போவேன்: சு.சாமி எச்சரிக்கை

மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது வீட்டில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யவேண்டும் என திரைத்துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் சஞ்சய் தத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியதாவது:
சஞ்சய் தத்திற்கு தண்டனை விலக்கு அளித்தால், அந்த முடிவை எதிர்த்து கோர்ட்டுக்கு போவேன். ஏற்கெனவே, இதைப்போல் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிக்கு வழங்கப்பட்ட சலுகையை எதிர்த்து நான் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளேன்.
சுதாகர் என்பவருக்கும் ஆந்திர மாநில அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ‘தண்டனையில் இருந்து மன்னிப்பு என்பது பொது நன்மையை சார்ந்ததா? என்று பரிசீலிக்கப்பட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. சஞ்சய் தத் விவகாரத்தில் அவரது தண்டனையை ரத்து செய்வதற்கான எந்த பொது நன்மையும் காணப்படவில்லை.
பொது மன்னிப்புக்கு என்று சில அளவுகோல்கள் உள்ளன. ஆனால், சஞ்சய் தத் விவகாரத்தில் அந்த அளவுகோல்களில் எதுவுமே பொருந்தி வருவதாக எனக்குத் தோன்றவில்லை. மற்றவர்களை எல்லாம்விட இந்த வழக்கில் அவருக்கு மிகக் குறைவான தண்டனையே வழங்கப்பட்டுள்ளது.
அவருடன் தண்டனை வழங்கப்பட்டுள்ள ஜெய்புன்னிசா என்ற பெண்ணிற்கு தடா சட்டத்தின் கீழ் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், சஞ்சய் தத்திற்கு ஆயுத சட்டங்களின் கீழ் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. சஞ்சய் தத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனையைவிட ஜெய்புன்னிசாவிற்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை கடுமையானது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்' என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications