7-வது நாளை எட்டியுள்ள அரவிந்த் கேஜரிவால் உண்ணாவிரதம்

உடல்நிலை மோசமானாலும், "எனது போராட்டத்துக்கான நோக்கம் நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிடமாட்டேன்" என்று தில்லியில் குடிநீர் மற்றும் மின் கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் உண்ணாவிரதம் இருந்துவரும் ஆம்ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார். அவரது உண்ணாவிரதம் நாளை, எட்டாவது நாளை எட்டுகிறது.
இது குறித்து, தொண்டர்களிடையே வியாழக்கிழமை அவர் பேசியதாவது, ‘சட்ட விரோதமாக உயர்த்தப்பட்டுள்ள குடிநீர், மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டாம் என்ற செய்தி சமூகத்தின் அனைத்து பகுதி மக்களையும் சென்றடைய வேண்டும். கட்டண உயர்வு காரணமாக தில்லியில் உள்ள குடிசை, கிராமம், மறுகுடியமர்த்தப்பட்ட காலனி, அங்கீகாரமற்ற காலனி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சாமானிய மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
தங்கள் வருமானத்தையும் விட அதிகமாக குடிநீர், மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகின்றனர். அத்தகைய சாமான்ய மக்களிடம் போராட்ட உணர்வை கொண்டுச் சேர்க்க வேண்டும். அதுவரை உண்ணாவிரதத்தை கைவிடமாட்டேன்' என்று கேஜரிவால் கூறினார்.
உண்ணாவிரதம் 7-வது நாளை எட்டியுள்ள நிலையில், அவரது உடல் நிலை பலவீனம் அடைந்துள்ளது. அவரது எடையில் 6 கிலோ குறைந்துள்ளது என்று அவரைப் பரிசோதிக்கும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
"குடிநீர், மின் கட்டண உயர்வுக்கு எதிரான மனுவில் 2.69 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். அந்த மனு விரைவில், முதல்வர் ஷீலா தீட்சித்திடம் அளிக்கப்படும்' என்று ஆம்ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா கூறினார்.
கடந்த 23-ம் தேதி, கிழக்கு தில்லி சுந்தர் நகரி பகுதியில் கேஜரிவால் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அவரது கட்சியினர், தில்லியில் 64 இடங்களில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அனைத்து வார்டுகளிலும் துண்டுப் பிரசுரம் விநியோகித்தும் அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications